மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கிறிஸ் கெயில் நிலைத்து ஆடவில்லை. ஒரு சிக்சர் அடித்ததோடு 13 ரன்களில் கெயில் வெளியேறினார். பின்னர் டிவில்லியர்ஸ் விராட் கோலியுடன் இணைந்தார். இந்த ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தது.
இதனால் பெங்களூரு அணியின் ரன் வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸ் கையில் கிடைத்த பந்துகளையெல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்தார். இதனால் மும்பை மைதானத்தில் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்து கொண்டிருந்தன. டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் சதமடித்து பிரமிக்க வைத்தார். அவரது சதத்தில் 3 சிக்சர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் அடிக்கும் 2வது சதம் இதுவாகும்.