இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு அவர் தலைமையில் கே கே ஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவர் அணியில் எடுக்கப்படவில்லை என்பது அவர் ஓரம்கட்டப்படுவதைப் போல உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.