13 ஆண்டுகால கங்குலியின் சாதனையை முறியடித்தார் டி வில்லியர்ஸ்
வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (17:14 IST)
அதிவேகமாக எட்டாயிரம் ரன்கள் குவித்த வீரர்களில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை, தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் முறியடித்தார்.
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி, 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 48 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
மேலும், டி வில்லியர்ஸ் 19 ரன்களை கடந்தபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களையும் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்காக அவருக்கு 182 இன்னிங்ஸில் விளையாடி இந்த இலக்கை எட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 200 இன்னிங்ஸ்களில் விளையாடி 8000 ரன்களை கடந்தார். அதே சமயம், அதிவேகமாக 7000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையும் டி வில்லியர்ஸ் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.