வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ்?

சனி, 8 அக்டோபர் 2011 (17:42 IST)
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- அல்போன்சா தாமஸ் தலைமையிலான சோமர்செட் மோதுகின்றன.

மும்பை அணி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டிரினிடாட் டொபாக்கோ அணிகளை வென்றது. கோப்ராசுடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நியூசவுத் வேல்ஸ் அணியிடம் தோற்று இருந்தது.

மும்பை அணியில் சதீஷ், ராயுடு, போல்லார்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் மலிங்கா, அபுநெச்சிம் சிறப்பாக வீசி வருகிறார்கள். இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

சோமர்செட் அணி லீக் ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகளை வென்று இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பெங்களூர் அணியிடம் தோற்று இருந்தது. அந்த அணியில் வான்டர் மெர்வ், கிவ்ஸ் வெட்டர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முரளி கார்த்திக் இடம் பெற்று உள்ளார்.

சோமர்செட் அணியும் இறுதிப்போட்டிக்கு நுழைய போராடும். இரு அணியும் சமபலம் வாய்ந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுடன் மோதும். இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்