வங்கதேச அணியால் வெல்ல முடியாது: சேவாக்

சனி, 16 ஜனவரி 2010 (15:56 IST)
“வங்கதேச கிரிக்கெட் அணி சாதாரணமானதே, அதனால் எங்கள் அணியை தோற்கடிக்க முடியும் என்று நான் கருதவில்லை” என்று இந்திய அணியின் அதிரடித் துவக்க ஆட்டக்காரரும், துணைத் தலைவருமான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடர் நாளை தொடங்குகிறது. சிட்டகாங் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்குவதையொட்டி, இன்று அந்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர சேவாக் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அந்த அணி மற்ற அணிகளை வெல்ல முடியும், ஆனால் டெஸ்ட் போட்டியில் முடியாது” என்று கூறிய சேவாக், இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வது முடிவான விடயம் என்றும் கூறியுள்ளார்.

தான் இவ்வாறு கூறுவது அதீத நம்பிக்கையால் அல்லவென்று கூறிய சேவாக், இந்திய அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறன் அந்த அணிக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

“அதீத நம்பிக்கையால் இவ்வாறு கூறவில்லை, அவர்களால் 20 இந்திய விக்கெட்டுகளை வீழத்த முடியாது, சிறிலங்க அணியால் முடியாததை வங்கதேச அணியால் முடியுமா, நிச்சயம் முடியாது” என்று சேவாக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்