தோல்விக்கு நானே பொறுப்பு; நானே முக்கியக் குற்றவாளி-தோனி

திங்கள், 16 ஜனவரி 2012 (10:21 IST)
FILE
ஒரு கேப்டனாக ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தோல்விகளுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் முழு அவமானத்திற்கும் நானே காரணம் என்று இந்திய கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

"நான் இந்த அணியின் தலைவர் எனவே நானே பொறுப்பேற்கிறேன்" என்றார் தோனி.

அதே போல் அணியின் மூத்த வீரர்களை நீக்கவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தோனி, "மூத்த வீரர்கள் பற்றி தொடர் முடிந்தவுடன் முடிவு செய்யவேண்டும். ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். அவர்களுக்கு அனுபவம் உள்ளது அதனை அவர்கள் இளைய வீரர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

இங்கிலாந்திலும் சரி, இங்கேயும் சரி நாங்கள் அதிக ரன்களைக் குவிக்கவில்லை இதுதான் பிரச்சனை. பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசி இரண்டு முறை எதிரணியை சுருட்ட போதுமான ரன்களை இந்த 2 தொடர்களிலும் நாங்கள் எடுக்கவில்லை.

ஓரிரண்டு போட்டிகளில் பேட்டிங் தோல்வி அடையலாம், ஆனால் 7 டெஸ்ட் போட்டிகள் என்பது இத்தகைய பேட்டிங் வரிசைக்கு சற்று அதிகமானதே.

இந்த அணி இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் மோசமான ஸ்திதியில் உள்ளது. பந்து வீச்சில் சீரான தன்மை இல்லை.

ஆனாலும் ஒட்டு மொத்தமாக பந்து வீச்சு பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. பேட்டிங் படு மோசமாக உள்ளது. தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு கூறினார் தோனி.

வெப்துனியாவைப் படிக்கவும்