சச்சின் அபார சதம்! மீண்டது இந்தியா!

Webdunia

ஞாயிறு, 15 ஜூலை 2007 (16:03 IST)
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில், 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தனது அபார சதத்தால் நிலைப்படுத்தினார் சச்சின் டெண்டுல்கர்!

இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. துவக்க ஆட்டக்காரர் டென்லி 83 ரன்கள் எடுத்தார்.

6வது ஆட்டக்காரராக களமிறங்கிய பிரஸ்னன் சிறப்பாக ஆடி 126 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக நின்றாடிய போர்ட் 50 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி முதலிலேயே சரிவைச் சந்தித்தது. முதலில் வாசிம் ஜஃபர் 1 ரன்னிற்கும், அவரைத் தொடர்ந்து வெங்கட்சாய் லக்ஷ்மண் ரன் ஏதும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கங்கூலியுடன் இணை சேர்ந்த சச்சின் அதிரடியாக ஆடினார். இந்திய அணி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கங்கூலி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு யுவராஜ் சிங்குடன் இணை சேர்ந்து விளையாடிய சச்சின், 140 பந்துகளில் 13 பெளண்டரிகளுடனும், 1 சிக்ஸருடனும் 100 ரன்களை எட்டினார். அணியின் எண்ணிக்கை 205 ரன்களை எட்டியிருந்த நிலையில் யுவராஜ் சிங் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகும் சச்சினின் அதிரடி நிற்கவில்லை. தோனியுடன் இணைந்து மேலும் 13 பெளண்டரிகள் அடித்து 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் ஆட்டமிழந்தார்.

2வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழ்ந்து 336 ரன்களை எடுத்துள்ளது. தோனி 44 ரன்களுடனும், ஜாஹீர் கான் 18 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்