ஜெய்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா நியூசீலாந்தை அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
கவுதம் கம்பீர் அபாரமாக விளையாடி 116 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். யுவ்ராஜ் சிங் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இந்தியா 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
17 ஓவர்களில் விஜயும், கம்பீரும் 87 ரன்கள் சேர்த்தபோது முரளி விஜய் 33 ரன்களில் தனது ஒருநாள் கிரிக்கெட் அதிகபட்ச ஸ்கோரை எட்டி வெட்டோரி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.
ஆனால் இந்த விக்கெட்டும் நியூஸீலாந்துக்கு வழி திறக்கவில்லை, காரணம் கவுதம் கம்பீர் புத்தி கூர்மையுடன் தனது இன்னிங்ஸை கட்டமைத்தார்.
கோலியும் தனது முந்தைய இரண்டு இன்னிங்ஸ்களிலிருந்து தொடர்ச்சியாக ஆடுவது போல் ஆடினார்.
இருவரும் இணைந்து ஸ்கோரை 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். நியூஸீலாந்து வெற்றி வாசல் அடைக்கப்பட்டது. கோலி 73 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து டெய்லரின் அபாரமான கேட்சிற்கு மெக்காயிடம் ஆட்டமிழந்தார்.
கவுதம் கம்பீர் 89 பந்துகளில் தன் சதத்தை எடுத்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில அபாரமான பவுண்டரிகளை அடித்தார். குறிப்பாக மெக்காய் பந்துகளை வெளுத்துக் கட்டினார்.
யுவ்ராஜ் சிங் களமிறங்கி நேதன் மெக்கல்லம் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து சிக்சருக்குத் தூக்கினார்.
கம்பீரின் இந்த இன்னிங்ஸ் சிறப்பான ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸாகும். தவறுகள் இழைக்காமல் விளையாடினார். தனது விக்கெட்டை எதிரணியினர் வீழ்த்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அவர் ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் அளிக்கவில்லை.
கோலிக்கும் இது ஒரு அபார இன்னிங்ஸாகும். பந்து வீச்சில் ஸ்ரீசாந்த் அபாரமாக வீசியது, கவுதம் கம்பீர் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தது, கோலி தொடர்ச்சியாக தனது மதிப்பைக் காத்து வருவது இந்திய அணிக்கு நல்ல அறிகுறிகளை வழங்கி வருகிறது.
நியூஸீ. அணியில் கேப்டன் வெட்டோரி மட்டுமே 8 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மற்ற வீச்சாளர்கள் அனைவரும் மெக்கல்லம் நீங்கலாக 6 ரன்களுக்கு மேல் ஓவர் ஒன்றிற்கு கொடுத்து நியூஸீலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தினர்.