செஞ்சுரியன் : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் அரை இறுதியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் 2 பிரிவாக இப்போட்டியில் பங்கேற்றன.
லீக் ஆட்டங்களின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா (5 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து நியூசிலாந்து (4 புள்ளி), இங்கிலாந்து (4 புள்ளி) அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக மட்டும் ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா (3 புள்ளி) ஏமாற்றத்துடன் வெளியேறியது.
ஆஸ்ட்ரேலியா அணி வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றையப் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இப்போட்டித் தொடங்குகிறது. ஈஎஸ்பிஎன் மற்றும் டிடி சேனலில் நேரடியாக அரையிறுதிப் போட்டி ஒளிபரப்பாகிறது.