குரங்கு கொடுத்த தண்டனை

சனி, 6 ஏப்ரல் 2013 (16:21 IST)
FILE
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். அவனுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எந்த வேலையும் செய்யாமல் சுலபமான வழியில் எப்படி சம்பாதிக்கலாம் என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

திருடி சம்பாதிக்கலாம் என அவன் முடிவு செய்தான். முதல் நாள் திருட கிளம்புவதற்குள் அவனை சோம்பல் ஆட்கொண்டது. திருடுவதற்கு கூட அவனது சோம்பேறித்தனம் இடம்கொடுக்கவில்லை. மீண்டும் யோசித்தான், வெகு நேரம் கழித்து ஒரு குரங்கிற்கு திருட பயிற்சி கொடுத்து அதை திருடி வரச்சொல்லலாம் என முடிவு செய்தான்.

அந்த சோம்பேறி கஷ்டப்பட்டு ஒரு குரங்கை பிடித்துவந்து அதற்கு திருட பயிற்சி அளித்தான். குரங்கிற்கு பயிற்சி முடிந்தது, முதல் முதலாக அக்குரங்கை அந்த சோம்பேறி திருட அனுப்பினான்.

முதல் முறையாக திருட சென்ற குரங்கு, அந்த ஊரின் செல்வந்தர் வீட்டிற்கு சென்று விலை மதிக்கமுடியாத ரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை திருடிக்கொண்டு வந்து சோம்பேறியிடம் கொடுத்தது.

அதிக மதிப்புள்ள அந்த திருட்டு மோதிரத்தை பார்த்த சோம்பேறி சந்தோஷத்தில் குதித்தான். தான் பயிற்சி கொடுத்த குரங்கு அதிக மதிப்புள்ள பொருளை திருடியதில் அவனுக்கு பேரானந்தம்.

அந்த மோதிரம் மட்டும்தான் அவன் கண்களுக்கு தெரிந்தது. விரைவில் இந்த கரங்கை வைத்து பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என கனவுக்கோட்டை கட்டினான்.

பின்விளைவுகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் உடனடியாக அந்த மோதிரத்தை கையில் அணிந்துக்கொண்டு ஊர் மக்கள் அனைவருக்கும் பெருமையாக காண்பித்தான் அந்த சோம்பேறி.

செல்வந்தரின் மோதிரம் திருட்டுபோனதை அறிந்த ஊர்மக்கள், அந்த சோம்பேறியை பிடித்து செல்வந்தரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மோதிரத்தை திருடியதோடு நில்லாமல், அதனை தைரியமாக ஊர்மக்களிடம் அந்த சோம்பேறி காட்டியதை அறிந்த செல்வந்தார் அவனுக்கு காலம் முழுக்க செல்வந்தரின் வீட்டில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென்று தண்டனை அளித்தார்.

சோம்பேறியாக காலம் தள்ளிய அவனுக்கு சம்பளம் கூட இல்லாமல் வேலை செய்யும் தண்டனை அளிக்கப்பட்டதை நினைத்து அந்த சோம்பேறி வருத்தமடைந்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்