பாத்திரங்கள் குட்டி போடுமா?

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:15 IST)
மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் ‌நகர‌ம் ஒ‌ன்‌றி‌ல் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த ராமன் எ‌ன்பவ‌ன், அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து, தன் மகனுக்குக் காது கு‌த்து விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும் கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை ராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து ராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட், நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை கொடுக்கவில்லையே எ‌ன்று கே‌ட்டா‌ன்.

அதற்கு ராமன் ‌நீ கொடு‌த்த பாத்திரங்கள் தா‌ன் குட்டி போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. அதனா‌ல் தான் அவற்றையும் சேர்த்து கொ‌ண்டு வந்தேன் என்றான்.

இவன் சரியான மு‌ட்டா‌ள் எ‌ன்று எண்ணிய சே‌ட், ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான்.
சில மாதங்கள் கழித்து, தன் வீட்டில் விசேஷம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் வேண்டும் என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

சரி என்று ஒப்புக் கொண்ட ராம‌ன், தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. ராம‌ன் பாத்திரங்களை திரும்ப கொ‌ண்டு போகவே இ‌ல்லை.

ஆகையால் சேட் நேரே ராமன் வீட்டுக்குச் சென்று, இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு ராமன், நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தன அ‌ல்லவா, ‌பிரசவ‌த்‌தி‌ன் போது ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன எ‌ன்று ‌மிக‌க் கவலையோடு தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா? எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்கு ராமன், பாத்திரங்கள் குட்டி போடும் போது அவைக‌ள் ஏ‌ன் சாகாது என்று கேட்டான்.

என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம் என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நக‌ந்தா‌ன் சேட்.

ஆனாலு‌ம் ராமன் அவனை ‌விடாம‌ல் மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி கூ‌றினா‌ன்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர், பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் சாக‌க் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு எ‌ன்று புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

ராம‌னி‌ன் பொது நல ‌சி‌ந்தனை‌க்கு‌ம், பு‌த்‌திசா‌லி‌த்தனமாக சே‌ட்டை ஏமா‌ற்‌றி ‌திரு‌ந்த வை‌த்தத‌ற்கு‌ம் ம‌ன்ன‌ர் வா‌‌ழ்‌த்துக‌ள் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்