சீடனாகும் தகுதி யாருக்கு?

திங்கள், 16 மார்ச் 2009 (16:07 IST)
ஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன பார்த்தாய்? என்று சொல் என கூறிவார்.

அவர்கள் குளத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்லும் பதிலை வைத்து அவர்களை சீடனாக ஏற்றுக் கொள்வார். பதில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்.

அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டதற்கு, ஒரே கேள்வி மூலமாக எப்படி சீடர்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு ஞானி, குளத்தில் மீன்கள் துள்ளுகின்றன என்று சொல்பவனைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். அதில் என் உருவம் தெரிந்தது என்று சொல்பவனை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்டவன், தான் என்ற எண்ணம் உடையவன். அவனுக்கு ஞானத்தை ஊட்ட முடியாது என்று விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்