குழந்தைகள் உங்கள் சொல்படி நடக்கவேண்டுமா ?

சனி, 12 ஜனவரி 2013 (14:33 IST)
FILE
இக்கால குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களை விட திறமையும், புத்திசாலித்தனமும் அதிகம். பள்ளியில் கல்வி தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில், குழந்தைகள் தங்கள் வயதிற்கு மீறிய அறிவுக்கூர்மையை வெளிபடுத்த தொடங்குகிறார்கள்.

அறிவுகூர்மை, அதீத புத்திசாலித்தனம், வியப்பூட்டும் செயல்திறன் என குழந்தைகளிடம் என்னதான் பாராட்டுக்குரிய நற்பண்புகள் இருந்தாலும் அவர்கள் நல்ல குணமுடைய மனிதர்களாக வளர்வது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது.

உங்கள் செல்ல குழந்தை பணிவான, நற்குணமுடைய குழந்தை என அனைவரிடமும் பேர் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டியிருக்கும்

திடமாக இருங்கள் - குழந்தை தவறு செய்துவிட்டால், நீங்கள் கண்டிக்கும் போது உங்களின் நோக்கத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். இன்னொரு முறை அதே தவறை செய்யாத விதத்தில் உங்களது நடவடிக்கை இருக்க வேண்டும்.

நிதானமாக இருங்கள் - குழந்தையை திருத்தும் போது வன்மையான சொற்களை பயன்படுத்தாதீர்கள். எது சரி எது தவறு என்பதை பொறுமையாக எடுத்து கூறுங்கள்.

எடுத்துகாட்டாக இருங்கள் - பெற்றோர் ஒழுக்கத்துடனும், நற்பண்புகளுடனும் இருந்தாலே பிள்ளைகள் அவர்களை எடுத்துகாட்டாக நினைத்து பின்பற்றி வருவார்கள்.

பரிசளியுங்கள் - உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்படி நடக்கும்போது, அவர்களை பாராட்டும் விதத்தில் பரிசளியுங்கள். இது அவர்கள் தொடர்ந்து நல்ல வழக்கங்களை பின்பற்ற உதவும்.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்கையிலே", என்பதை போல குழந்தைகளுக்கு நற்பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுகொடுத்தால் பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு அது புது அர்த்தத்தை அளிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்