இந்தியாவில் தடை செய்யப்பட்ட சந்தோஷ் என்ற திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பிரிட்டிஷ் - இந்திய இயக்குனரான சந்தியா சுரி இயக்கத்தில் உருவான படம் சந்தோஷ். இந்த படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. இந்த படத்தை இயக்கிய சந்தியா சுரி முன்னதாக இயக்கிய ஆவணப்படங்களான I For India, Around India with a Movie Camera உள்ளிட்ட படங்கள் இந்தியா குறித்த தவறான பிம்பங்களை உருவாக்குவதாக புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி 10ம் தேதியே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படத்திற்கு மத்திய சென்சார் போர்டு சில மாற்றங்களை படத்தில் செய்தால் தணிக்கை சான்றிதழ் பெறலாம் என கூறிய நிலையில், அதை படக்குழுவினர் மறுத்ததால் படம் இந்தியாவில் வெளியாகவில்லை.
இந்த படத்தின் கதை சுருக்கம் இதுதான். போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து இறந்த ஒருவருடைய விதவை மனைவிக்கு அந்த போலீஸ் வேலை கிடைக்கிறது. ஒரு தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் வேலையில் அவளும் ஈடுபடுகிறாள். அதில் என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் ஒன்லைம். இந்த படம் போலீஸ் வன்முறை, சாதிய வன்கொடுமைகளை அப்பட்டமாக காட்டுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் மேலை நாடுகளின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்தியா குறித்த தவறான பிம்பத்தை உள்நோக்குடன் சித்தரிப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Edit by Prasanth.K