இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?

சனி, 19 ஜூன் 2021 (12:49 IST)
மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
கடலுக்குள் செல்லும் பேருந்து
 
இலங்கையில் கடல் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்கும் திட்டம் கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் கச்சத்தீவு முதல் நெடுந்தீவு வரையிலான கடலில் பேருந்து கூடுகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் போடப்பட்டு வருகிறது.
 
இதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு மற்றும் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் யாழ்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து துறையால் கைவிடப்பட்ட 40 பேருந்துகளை கப்பலில் ஏற்றி கொண்டு இந்திய இலங்கை இடையே உள்ள சர்வதேச கடல் எல்லை வரை செல்கின்றனர்.
ஒரு நாளைக்கு நான்கு பேருந்துகளை மட்டும்மே கடலில் இறக்க முடியும் என்பதால் பத்து நாட்களில் இந்த 40 பேருந்துகளையும் கடலில் இறக்க திட்டமிட்டு கடந்த 12ந்தேதி முதல் இலங்கை கடல் பகுதியான நெடுந்தீவு, நயினா தீவு, கச்சத்தீவு பகுதிகளில் இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தீவுகள் அனைத்தும் இலங்கை கடற்பரப்பிற்குள் இருந்தாலும் இந்திய கடல் எல்லைக்கு அருகாமையில் உள்ளது.
 
இவ்வாறு பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடலில் இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் உருவாகி, வடக்கு கடலில் கடலுணவு வளம் அதிகரிக்கும் என இலங்கை மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
 
ரயில் பெட்டிகளை கடலில் இறக்க திட்டம்
 
இந்த திட்டம் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் கடலில் போடப்படுகின்றன.
 
அந்த வகையில் தான் இலங்கை மீன்பிடி அமைச்சகம் சார்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இவ்வாறு பேருந்துகளை இறக்கி வைத்து அதனை செயற்கை பவளப்பாறைகளாக மாற்றி வருகிறோம். இது தவறான செயல் ஒன்றும் இல்லை.
 
இலங்கையை பொறுத்தவரை இது புதிய முறையும் அல்ல, காரணம் மன்னார் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் அவர்களுடைய பழைய பஸ், கார், டிராக்டர் போன்றவற்றை கடலில் போட்டு அதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணக்கையை உயர்த்தி மீன்பிடி தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
 
இந்த திட்டம் இலங்கை அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக திரிகோணமலையில் இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தால் கைவிடப்பட்ட பேருந்துகள் கடலில் இறக்கப்பட்டுள்ளன.
 
அதுமட்டுமில்லாமல் இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் கைவிடப்பட்ட ரயில்களை கொடுங்கள் நாங்கள் அதனை கடலில் இறக்கி பவளப்பாறைகளாக மாற்றுகிறோம் என கேட்டுள்ளேன். அதற்கு அமைச்சரவையில் நல்ல பதில் கிடைத்துள்ளது எனவே விரைவில் அதற்கான அனுமதியும் இலங்கை ரயில்வே துறையில் இருந்து வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று கூறுகிறார் டக்ளஸ் தேவானந்தா.
 
இந்திய மீனவர்களுக்கும் பலன் உண்டு
இலங்கை கடற்பரப்பில் போடப்படும் இந்த கைவிடப்பட்ட பேருந்துகள் கடல் நீரோட்டத்தின் காரணமாக இந்திய கடற்பரப்பிற்குள் வந்தால் இந்திய கடற்பரபபு மாசுபடும் என இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டக்ளஸ் தேவானந்தா, இந்த திட்டத்ததால் கடல் வளம் அழிய சாத்தியம் இல்லை. காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கான்கிரீட் தூண்கள் அமைத்து நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
கடலில் இறக்கும் இந்த பழைய பேருந்துகள் கடல் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக இந்திய எல்லைக்குள் போகாமல் இருக்க பேருந்தின் நான்கு புறமும் கான்கிரீட் போட்டு உறுதியாக கடலில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டும்மே செய்து வருகிறது.
 
இலங்கை மீன் வளத்துறையால் கடலில் போடப்படும் இந்த பேருந்துகள் செயற்கை பவளப்பாறையாக மாறி அதன் மூலம் கிடைக்கும் மீன்கள் நிச்சயம் இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பரப்பிற்குள் செல்லும் என்பதால் இந்திய மீனவர்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்.
 
இந்த திட்டத்தால் இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படாது. இலங்கை கடற்பரப்பில் உருவாகும் மீன்களுக்கு இந்திய கடல் இலங்கை கடல் என பிரித்து பார்க்க தெரியாது எனவே மீன்கள் இந்திய கடலுக்குள் செல்ல அதிக வாய்ப்புண்டு.
 
தமிழ்நாட்டுக் கடற்பரப்பில் உள்ள வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடித்து அழித்துள்ளனர்.
 
இந்திய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களுக்கு எது தங்களது எல்லை என்பது நிச்சயம் தெரியும். அதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்தால் நிச்சயம் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க முடியும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.
 
இரு நாட்டு மீனவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு
தொடர்ந்து பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழைப்பை ஏற்று கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் டெல்லி சென்றிருந்தோம்.
 
அப்போது இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்ட ஆண்டு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு இந்திய மீன் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு மீன்வளத்துறை, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், இலங்கை மீன்வளத்துறை, இலங்கை கடல்வள ஆராய்ச்சி நிலையம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ள வல்லுனர்களை கொண்டு இலங்கை கடல் வளத்தை எப்படி பாதுகாப்பது, கடல் வளங்களை எப்படி ஊக்கப்படுத்தலாம் என்பது குறித்து அறிக்கையாக தயார் செய்து நான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் கொடுத்திருந்தேன்.
 
இந்திய அரசு இது ஒரு அற்புதமான திட்டம் என்றும் இது குறித்து கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிக்கை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை" என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.
 
பேருந்துகளை கடலில் இறக்குவதற்கு இலங்கை மீனவர்கள் ஆதரவு
 
இத்திட்டம் குறித்து யாழ்பாணம் மீனவ சங்க தலைவர் அன்னராசா பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கை அரசாங்கமும் மீன் வளத்துறை அமைச்சரும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, நீண்டகால முயற்சியாக இலங்கை வடக்கு மீனவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தற்போது யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் பேருந்துகளை இறக்கி வருகின்றனர்.
 
இலங்கை கடல் எல்லைக்குள், இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எங்களுடைய கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கோடு பேருந்துகள் கடலுக்குள் போடப்பட்டு வருகின்றன.
 
இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையை யாழ்பாணம் மாவட்ட மீனவ சமூதாயமும், மீனவ சங்கங்களும் வரவேற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் சிலர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
 
இந்திய கடற்பரப்பில் இது போன்ற பழைய இரும்புகள் கடலுக்குள் போடப்பட்டு செயற்கை பவளப்பாறைகள் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அறியாதவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து பவளப்பாறைகளையும், கடல் வளங்களையும் அழித்து வருவதாக குற்றம்சாட்டுகிறார் யாழ்பாணம் மீனவர் சங்க தலைவர் அன்னராசா.
 
இந்திய மீனவர்களுக்கு கண்டனம்
தொடர்ந்து பேசிய அன்னராசா, "இலங்கை வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு இலங்கை கடலில் தொடர்ந்து பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்று நெடுந்தீவு, கச்சத்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, கடற்பரப்பிலும் பேருந்துகள் போடப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
 
தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக செய்தி வாயிலாக அறிந்தோம். இவ்வாறான செயல்பாடுகளை இந்திய மீனவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் போராடும் சூழல் உருவாகும்" என்கிறார் யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அன்னராசா
 
மீனவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்
பேருந்துகள் கடலில் போடப்படுவதால் நாளடைவில் எவ்வாறான பிரச்சனைகள் வரக்கூடும் என இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற கடல் சார் பேராசிரியர் சூசை ஆனந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்குவதால் உள்ளுர் மீனவர்களின் படுப்பு வலை தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் கவிழ்ந்தால் படகில் உள்ள மீனவர்கள் உயிரிழக்க நேரிடும்.
 
கைவிடப்பட்ட பேருந்து கூடுகள் எடை குறைந்தவை என்பதால் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் நகரும். இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம்.
 
மேலும், பேருந்து கூடுகள் இறக்கும் இடத்திற்கு அருகில் நண்டுவலை, சுறாவலை, திருக்கை வலை, கும்ளாவலை, போன்றவற்றை பயன்படுத்த முடியாது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதேநேரம் இலங்கையில் இறுதி கட்ட போரின் போது மன்னாரில் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் மீன் உற்பத்தி நன்றாக உள்ளது என்கிறார் சூசை ஆனந்தன்.
 
மீன் பிடி தொழில் அழியும் அபாயம்
இது குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது மீனவர்கள் விரிக்கும் வலைகள் காற்றின வேகம் காரணமாக கச்சத்தீவு வரை செல்லக்கூடும் அவ்வாறு செல்லும் மீன் பிடி வலைகள் இந்த பேருந்துகளில் சிக்கி கிழிந்து மீனவர்கள் வலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.
 
இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இந்த நிலை நீடித்தால் இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க முடியாமல் மீன்பிடி தொழிலை கைவிட்டு விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாவட்டங்களுக்கு செல்ல நேரிடும். இதனால் காலப்போக்கில் மீன் பிடி அழியும் சூழல் ஏற்படும்.
 
எனவே இலங்கை மீன் வளத்துறை இந்திய மீனவர்களின் மீன் பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் ரகசியமாக திட்டமிட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
 
இந்திய அரசு மீன் உற்பத்தியை அதிகரிக்க கான்கிரீட்டால் ஆன செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் போட்டு வருகிறது. அதே போல் இலங்கை அரசும் கைவிடப்பட்ட பேருந்துகளை பழைய இரும்பு விலைக்கு விற்று அதில் வரும் பணத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைத்து கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.
 
இலங்கை அரசு அதை செய்யாமல் உலக நாடுகளில் எங்கும் செய்யாத ஒரு செயலை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் இலங்கை அரசு திட்டமிட்டே இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்கிறார் ஜேசுராஜா.
 
கடலில் போடும் பேருந்தால் கடல் மாசுபடாது
இலங்கை கடற்பரப்பில் போடப்படும் பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஒருவரிடம் கேட்ட போது, ஆரம்ப காலங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் கடலில் போடப்பட்டு வந்தது. காலப்போக்கில் டயர்களில் உள்ள ரப்பர்களால் கடல் மாசுபடும் என ஆய்வுகளில் தெரிய வந்ததையடுத்து கடலில் போடப்பட்ட டயர்கள் திருப்பி எடுக்கப்பட்டன.
 
பல நாடுகளில் கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க கைவிடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அது நல்ல பலனை அளித்து வருகிறது. கடலில் பல ஆண்டுகள் இரும்பு வாகனங்கள் இருப்பதால் அந்தப்பகுதிகளில் கடல் வாழ் உயிரின பெருக்கம் அதிகரித்துள்ளது.
 
கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் போடும் போது பேருந்துகளின் மேற்பரப்பில் பாசி பிடித்து நுண்ணுயிர்கள் வளர தொடங்கி அது ஒரு நல்ல செயற்கை பவளப்பாறையாக மாறும். பேருந்தின் மேற்பரப்பில் பாசிகள் வளர்வதால் துருப்பிடித்து கடல் மாசுபட வாய்பில்லை.
 
அதே போல் நாளடைவில் பேருந்துகள் கடல் நீரோட்டம் காரணமாக உடைந்து வேறு இடத்திற்கு சென்றாலும் அந்த பாகம் நிச்சயம் மற்றொரு செயற்கை பவளப்பாறையாக மாறும். எனவே கடல் மாசுபடாது என்கிறார் அந்த பெயர் வெளியிட விரும்பாத இந்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்