சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அவசர ஒப்புதல்

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:40 IST)
ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றுக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மனிதர்கள் உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.

இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் தரவுகளின்படி அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை 80, 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 399 பேர் பலியாகி உள்ளனர்.

31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தன. ஆனால், பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை என அந்த முகமை தெரிவித்துள்ளது. ஆனால், என்ன பக்கவிளைவுகள் என குறிப்பிடப்படவில்லை.

இவர்களில் பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் சினோஃபார்ம் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த தடுப்பூசி முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் வெற்றிபெற்றுள்ளது. 28 நாட்களில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி, இந்த பரிசோதனையில் பங்கேற்ற 100% தன்னார்வலர்கள் உடல்களிலும் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாகியுள்ளதாக ஜூலை மாதம் அபுதாபி அரசு தெரிவித்திருந்தது.

இறந்த வைரஸ்கள் அல்லது வைரஸ்களில் இருந்து எடுக்கப்படும் புரதம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வகை தடுப்பூசிகள் (inactivated vaccines) இன்ஃப்ளூயென்சா காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல்நாடாக ரஷ்யா உள்ளது. ஆகஸ்ட் மாதம் அந்நாடு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்