கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் - நேரலை

சனி, 13 மே 2023 (10:17 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது.
 
காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருப்பதால் பெங்களூரு மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
 
36 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து நிலவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
முன்னிலை நிலவரம்
மொத்த தொகுதிகள் - 224
 
முன்னிலை நிலவரம் தெரிந்தவை: 202
 
பாஜக - 70
 
காங்கிரஸ் - 104
 
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 23
 
சுயேச்சை - 3
 
மற்றவை - 2
 
முடிவுகளை தொகுதி வாரியாக விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியதாக கூறப்பட்டாலும், உண்மையில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான நேரடி மோதலாகவே இந்த தேர்தல் வர்ணிக்கப்பட்டது. தேசிய அளவில் மூன்றாவது பெரிய சக்தியாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிட்டது.
 
முக்கிய அம்சங்கள்
காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருப்பதால் பெங்களூரு மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி - தார்வாட் மத்தியத் தொகுதியில் பின்தங்கியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் டி.கே.ஷிவகுமார் கனகபுரா தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
கர்நாடக முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை ஷிகாவோன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஷிம்லாவில் உள்ள ஜாக்கு கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
எடியூரப்பாவின் மகனும் பாஜக வேட்பாளருமான விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. குமாரசாமி பெங்களூரு கோயிலில் வழிபாடு செய்தார்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன. 36 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகளை எண்ண தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தலைவிதி இன்று நிர்ணயிக்கப்படுகிறது.
 
நண்பகல் வேளையில் கர்நாடகாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெளிவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், அந்தக் கட்சி தனிப் பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறுகின்றன. அப்படியான நிலை உருவானால், மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்புள்ள எச்.டி. குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
 
கருத்துக் கணிப்புகளை புறந்தள்ளி, கர்நாடகாவில் எந்தவொரு கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்ததில்லை என்ற கடந்த 35 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று பா.ஜ.க. நம்பிக்கை தெரிவிக்கிறது. காங்கிரசோ, இப்போதே தனது எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தயாராகி வருகிறது.
 
கோவா, மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் அதையும் சமாளிக்க ஏதுவாக, சிறிய கட்சிகள், சுயேட்சைகளை இழுக்க அக்கட்சி இப்போதே தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், தேசிய அரசியலில் அந்த கட்சியின் நிலை இன்னும் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக காங்கிரஸ் உருவெடுக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பா.ஜ.க.வை எதிர்க்கும் வல்லமை காங்கிரசுக்கு இருக்கிறதா என்று சந்தேகத்துடன் நோக்கும் கட்சிகள், அடுத்து வரும் நாட்களில் காங்கிரசை நோக்கி ஈர்க்கப்படலாம் என்பது அவர்களின் கருத்து.
 
அதேநேரத்தில், "அடுத்த ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம், கிங் மேக்கர் அல்ல, நாங்களே 'கிங்'காக வருவோம்" என்று மத சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி நம்பிக்கையுடன் இருக்கிறார். இதில், யாருடைய எண்ணம் ஈடேறப் போகிறது என்பது இன்று நண்பகல் வேளையில் தெளிவாகி விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்