தி.மு.க. கூட்டணியை நெருங்குகிறாரா கமல்ஹாசன்?

புதன், 28 டிசம்பர் 2022 (10:10 IST)
இன்று நடந்த அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டத்தில் காராசாரமான விவாதங்களும் உள்ளே நடந்துள்ளன. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வலுவான நிலையில் எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், டி. ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒவ்வொருவராகப் பேச அனுமதிக்கப்பட்டனர்.
 
ஆரம்பத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், "ஓ. பன்னீர்செல்வம் ஒரு அரசியல் போலி. சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் எதிர்கொண்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதே கருத்தை வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளலாம் என பேசியதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
 
ஓ. பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். மாவட்டச் செயலாளர்களில் பலரும் அதே கருத்தை எதிரொலித்தனர். பா.ஜ.கவுடனான கூட்டணிக்கும் சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 
இறுதியாகப் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் கூட்டணி குறித்து யாரும் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்றும் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டுமென்றும் வாக்குசாவடி மட்டத்தில் அ.தி.மு.கவை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அ.தி.மு.கவை பா.ஜ.க. தங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்றும் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் எனக் கூறியதில்லை என்றும் தேர்தலின்போது யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அ.தி.மு.கவே உறுதிசெய்யும் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேச வேண்டிய அவசியமே ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். "கட்சிக்குள் பிரச்னை இல்லை. இல்லாத பிரச்னையை எதற்குப் பேச வேண்டும்? ஓ.பி.எஸ். குறித்தோ, டி.டி.வி. தினகரன் குறித்தோ, சசிகலா குறித்தோ நாங்கள் விவாதிக்கவேயில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்துவது குறித்துதான் விவாதித்தோம். ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவதைப் போல ஓ.பி.எஸ். செய்கிறார். அதை பற்றிப் பேசவில்லை.
 
நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி இருக்கும். இடப் பகிர்வை, அ.தி.மு.கதான் முடிவுசெய்யும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், ஓ.பி.எஸ். எப்படி கட்சி தன்னுடையதென சொல்ல முடியும். அவருடைய பதில் ஏற்கப்படாது. உடனிருப்பவர்களைத் திருப்திப்படுத்த அதைச் செய்யலாம்.
 
ஓ.பி.எஸ்சை அடையாளம் காட்டியது சசிகலாவும் டிடிவியும்தான். அவர்கள் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடலாம். இவர்களுடைய ஒரே எண்ணம் ஜெயலலிதாவின் கட்சி வெற்றிபெறக்கூடாது என்பதுதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவருடைய மகன் மட்டும்தான் ஜெயித்தார்" என்று தெரிவித்தார். பொதுக் குழு குறித்து தற்போது நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு மிகப் பெரிய மாநாடு ஒன்றை நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்