கொரோனா வைரஸ்: டெல்லியில் 50க்கு மேற்பட்டடோர் கூடத் தடை

திங்கள், 16 மார்ச் 2020 (16:26 IST)
மஹாராஷ்டிராவில் மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மஹாராஷ்டிராவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் மார்ச் 19 முதல் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை மூன்று நாட்களில் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் உள்பட பல இடங்களிலும் தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அங்கு வருவோர் அனுமதிக்கப்பட்டார்கள்.

வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை, டெல்லியில் உள்ள இரவுவிடுதிகள், உடற்பயிற்சிகூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவை அனைத்தும் மூடப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

திருமணங்களை தவிர 50 பேருக்கு மேலாக கூடும் அனைத்து நிகழ்வுகளும் அனுமதிக்கப்படாது என்று அரவிந்த் கேஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்களையும் தள்ளிப்போட முடியுமானால் அவ்வாறு செய்யுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்