100 கோடி தடுப்பூசி இந்தியா குறித்த ஐயங்களுக்கு விடை - பிரதமர் மோதி

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (14:01 IST)
100 கோடி டோஸ் என்ற மைல் கல்லை இந்தியா கடந்திருப்பது இந்தியா குறித்து எழுப்பப்பட்ட ஐயங்களுக்கான விடை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

 
வியாழக்கிழமை இந்தியா 100 கோடி மைல் கல்லைக் கடந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோதி “இந்தியாவால் சமாளிக்க முடியுமா?இவ்வளவு பேருக்கு இந்தியாவால் தடுப்பூசி செலுத்த முடியுமா?தடுப்பூசி வாங்க பணத்துக்கு இந்தியா எங்கே போகும்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன”என்று அவர் குறிப்பிட்டார்.
 
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் முன்னரண் என்பது மக்கள் பங்கேற்பு என்று கூறிய அவர் அதன் ஒரு பகுதியாகவே மக்கள் விளக்கு ஏற்றினார்கள், மணியடித்தார்கள். ஆனால், இதெல்லாம் கொரோனாவை ஒழிக்க உதவுமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள் என்றும் மோதி குறிப்பிட்டார்.“இந்தியாவின் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை விஐபி பண்பாடு குலைத்துவிடாமல் பார்த்துக்கொண்டோம். எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள்” என்றும் மோதி குறிப்பிட்டார்.
 
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து நேர்மறை எண்ணத்தோடு இருப்பதாக குறிப்பிட்ட மோதி வரவிருக்கும் பண்டிகைகளை மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடவேண்டும் என்றும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் போட்டுக்கொள்ளாதவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்