வரதட்சணை வழக்கில் தண்டனை குறைக்கக்கூடாது

வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு ஏற்படும் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

தண்டனையை குறைத்து குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சில பிரிவு வழக்குகளுக்கு பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், அஞ்சுதேவி என்பவர் வரதட்சணைக் கொடுமை காரணமாக மரணம் அடைந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது கணவருக்கும், மாமியாருருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் பஞ்சாப் மாநில அரசு, சில மாதங்களுக்கு முன்பு சில குற்றவாளிகளின் தண்டனையை குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்தது. அதில் மரணமடைந்த பெண்ணின் கணவரும் விடுதலையாகிவிட்டார்.

ஏற்கனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் விடுதலையானது குறித்து அஞ்சுதேவியின் பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த வழக்கு விசாரணையின்போது, கணவ‌ர் முன்கூட்டியே விடுதலையான விஷயம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் விளக்கம் கேட்டு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.

பஞ்சாப் மாநிலத்தின் விளக்கத்தைக் கேட்ட பிறகு நீதிமன்ற நீதிபதிகள் சி.கே. தாக்கர், டி.கே. ஜெயின் ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432வது பிரிவின் கீழ் கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்க அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், குறிப்பிட்ட சில பிரிவு வழக்குகளுக்குப பொருந்தாது. குறிப்பாக 304 பி (வரதட்சணை சாவு) பிரிவுக்கு ஏற்புடையது அல்ல.

எனவே இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலையாகியிருந்தால் அவர்கள் உடனடியாக சரணடைந்து எஞ்சிய தண்டனைக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்