கர்ப்பத்தை தடுப்பது குறித்த உண்மைகளும்...கட்டுக்கதைகளும்!

புதன், 21 டிசம்பர் 2011 (17:28 IST)
கர்ப்பமடையாமல் தடுக்க பல்வேறு நிரூபிக்கப்பட்ட மருத்துவ முறைகள் உள்ளபோதிலும், நம்மில் பலர் இப்படியெல்லாம் பின்பற்றினால் கர்ப்பமடையாமல் தடுக்கலாம் என்று தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்டு சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.ஆனால் அது "ஒர்க் அவுட்" ஆகாமல் போகும்போதுதான லபோ...திபோ...என்று அடித்துக்கொண்டு புலம்புவார்கள். அப்படியான சில அபத்தமான முறைகளும்,உண்மைகளும் இதோ!

1) மாத விலக்கின்போது உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்காது...

நம்மில் பல பெண்களிடம் இப்படியான சில அபத்தமான நம்பிக்கை உள்ளது. மாத விலக்கின்போதோ அல்லது மாத விலக்கு தொடங்கிய அல்லது முடிகிற தருவாயில் உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்காது என்ற எண்ணத்தில் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் மிக தவறானது என்கிறார்கள் நிபுணர்கள்.

விந்தணு பெண்ணின் உடம்பில் 5 நாட்கள் வரை உயிர் வாழும் திறனுடையது என்பதால், உறவுகொண்ட 5 தினங்களுக்கு பின்னர் கூட பெண்கள் கர்ப்பமடைவதற்கு மிக அதிக வாய்ப்புண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஒரு பெண்ணின் மாதவிலக்கு நாட்கள் சீராக இருந்தாலும், அப்பெண்ணின் சினைப்பை எப்பொழுது கருமுட்டைகளை வெளியேற்றும் என்பதை சொல்ல முடியாது.குறிப்பாக இளம் வயது பெண்கள் இது விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2)உறவுகொண்ட பின்னர் உறுப்பை கழுவிவிட்டால் கர்ப்பம் தரிக்காது...

இதுவும் ஒரு அபத்தமான முறையே.உறவுகொண்ட பின்னர் உறுப்பை கழுவுவதோ அல்லது குளிப்பதோ கர்ப்பம் உருவாவதை தடுக்க எவ்விதத்திலும் உதவாது. ஏனெனில் விந்தணு ஏற்கனவே சினை முட்டையை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கும்.

அதேப்போன்று வேறு சில பெண்கள், பிறப்புறுப்பில் 'ட்யோடரண்ட்' எனப்படும் வாசனை திரவத்தை ஸ்பிரே செய்துகொள்வது, கோலா பாட்டிலை குலுக்கி ஊற்றிக்கொள்வது, டூத் பேஸ்ட்டை தடவிக்கொள்வது என பலமுறைகளை பின்பற்றுகிறார்கள். இப்படி செய்வதினால் விந்தணு கொல்லப்பட்டுவிடும் என்றெண்ணி இம்முறைகளை பின்பற்றுகிறார்கள். இதுவும் மிக தவறான,உறுப்பில் தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் பலன் தராது முறையாகும்.

3) வயதாகிவிட்டால் கர்ப்பம் தரிக்காது...

இந்த எண்ணமும் மிக தவறானது ஆகும். பெண்களுக்கு மாத விலக்கு வரும் வரை கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது. வயதாகிவிட்ட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான் என்றாலும், மாதவிலக்கு நின்று ஒரு முழு வருடம் பூர்த்தியான பின்னரே கர்ப்பம் தரிக்கும் பயமில்லாமல் அல்லது பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் கவலையின்றி உறவு வைத்துக்கொள்ளலாம்.

4) விந்து வெளியாகும் முன்னர் வெளியே எடுத்துவிடுவது...

பெண்ணுடன் உறவு கொள்ளும் ஆண், விந்து வெளியாவதற்கு முன்னர் தனது உறுப்பை வெளியில் எடுத்துவிட்டால் கர்ப்பம் தரிக்காது என்ற முறையும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. சாதரணமாக விந்து வெளிப்படுவதற்கு முன்னரே ஓரிரு துளி விந்து கசிந்துவிடுவது வழக்கமான ஒன்று. இந்த ஓரிரு துளியிலேயே சில விந்தணுக்கள் இருக்கும். கர்ப்பம் தரிக்க ஒரே ஒரு விந்தணுவே போதுமானது என்று இருக்கையில் இந்த "ரிஸ்க்" தேவையா? என்கிறார்கள் நிபுணர்கள்.

எனவே கர்ப்பம் தரிக்காமல் இருக்க ஆணுறை, மாத்திரைகள் போன்ற பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்