தீபாவை இயக்குவது பாஜகதான்; ஆதாரத்தை வெளியிடுவேன் - நடராஜன் அதிரடி

புதன், 18 ஜனவரி 2017 (12:40 IST)
தீபாவை இயக்குவது பாஜகதான் என்றும் அதிமுகவை உடைக்க நடக்கும் முயற்சிகளை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்றும் அதிமுக பொதுச்செயலாளார் சசிகலாவின் கணவன் நடராஜன் கூறியுள்ளார்.


 

முன்னதாக தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடராஜன், “அதிமுகவை உடைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுகவை உடைக்கும் பிரதமர் மோடியின் எண்ணமும் நிறைவேறாது'' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன் அதிமுகவை பாஜக உடைப்பதற்கு செய்யும் பின்னனி வேலைகள் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீபாவை இயக்குவது பாஜகதான். தீபா மற்றும் தீபக் எங்கள் வீட்டு குழந்தைகள். அவர்களை பாஜக தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. இதை அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்