பன்னீர்செல்வத்திற்கு சத்திய பாமா எம்.பி. ஆதரவு: வலுக்கும் ஓ.பி.எஸ். கை!

சனி, 11 பிப்ரவரி 2017 (23:36 IST)
முதல்வர் பன்னீர் செல்வத்திற்குதான் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதா செயல்படுத்த நினைத்த திட்டங்களை பன்னீர் செல்வம் நிறைவேற்றுவார் என்று அதிமுக எம்.பி. சத்தியபாமா கூறியுள்ளார்.


 

சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சராமாரியான குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்த தமிழக அரசியல் நிலவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

இதனால், தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பன்னீர் செல்வத்திற்கு ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்.பி்.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சத்தியபாமா கூறுகையில், ‘‘ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு பதவி தரப்படுகிறது. ஜெயலலிதாவிற்குதான் மக்கள் வாக்களித்தார்கள். முதல்வர் பன்னீர் செல்வத்திற்குதான் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதா செயல்படுத்த நினைத்த திட்டங்களை பன்னீர் செல்வம் நிறைவேற்றுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்