அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா போஸ்டர் கிழிப்பு - வலுக்கும் எதிர்ப்புகள்

புதன், 4 ஜனவரி 2017 (12:43 IST)
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவின் உருவப்படம் உள்ள போஸ்டர்கள், தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா கட்சியின் தலைமை ஏற்று, வழிநடத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் குரல் கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் கடந்த மாதம் 31ம் தேதி அதிமுகவின் பொருளாலராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில் அவரே தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையை தம்பிதுரை உள்ளிட்ட சிலர் முன்னிறுத்தி வருகின்றனர். எனவே, சசிகலா அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
மேலும், அதிமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது.  அந்த கூட்டம் வருகிற 9ம் தேதி வரை அதிமுக தலைமைக் கழகத்தில் நடக்கிறது. இன்று காலை அங்கு வந்த சசிகலா மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசானை செய்து வருகிறார். 
 
ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில், சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில அதிமுகவினர் அவரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் வழியில் ஜெயலலிதா மற்றும் சசிகலா உருவப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் சசிகலாவின் உருவப்படங்களை மட்டும் சிலர் கிழித்து விட்டனர். அதேபோல், கட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களிலும் சசிகலாவின் உருவப்படம் கிழிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்