தமிழகத்தின் இதயத் துடிப்பே! : ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு வலுக்கும் ஆதரவு

புதன், 14 டிசம்பர் 2016 (18:47 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், கட்சி தலைமையை அவரின் சசிகலா ஏற்று வழி நடத்திச் செல்ல வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால், சசிகலாவிற்கு ஆதரவு பெருகி வருவதால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை அவர் ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில தொண்டர்கள், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.
 
அம்மாவின் குல விளக்கே.. ஆளப் பிறந்தவளே.. தமிழகத்தின் இதய துடிப்பே.. என்கிற ரீதியில் வாசகங்கள் பறக்கிறது. 
 
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
 
தனது அத்தையான ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று தீபா பலமுறை சந்திக்க முயன்ற போதும், ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதும்,  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னால் சசிகலாதான் இருக்கிறார் என தீபா பகீரங்கமாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்