'காஸா போர் : இஸ்ரேல் மீதான ஐ.நா. குற்றச்சாற்று ஒருதலைபட்சமானது'

வியாழன், 1 அக்டோபர் 2009 (15:28 IST)
காஸா போரின்போது இஸ்ரேல் படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஒருதலைபட்சமானது என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்கனவே உரிய முறையில் செயல்படுத்தியுள்ளதாக கூறினார்.

கடந்த 2008 டிசம்பர் மற்றும் 2009 ஜனவரி மாதங்களில் நடைபெற்ற காஸா போரின்போது இஸ்ரேல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், இது குறித்த விசாரிப்பதற்காக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க நீதிபதி ரிச்சர்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான இக்குழுவினர் நடத்திய விசாரணையில், இஸ்ரேல் வீரர்கள் போர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்