ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல்

திங்கள், 26 ஏப்ரல் 2010 (16:20 IST)
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்குவதற்கு முன் முதலில் இந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதை கண்டறிய ஆய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கஸ்தூரி கர்நாடக ஜனபிரசிய வேதிகே அமைப்பின் தலைவர் ரமேஷ்கவுடா தலைமையில் 200 கர்நாடகவினர் தமிழ்நாடு கர்நாடகா எல்லைப்பகுதியான கர்நாடகாவிற்கு உட்பட்ட புளிஞ்சூரில் நேற்று காலை 11.45 மணியில் இருந்து 12.15 மணிவரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சாம்ராஜ்நகர் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பிரகாஷ் தலைமையில் காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செய்தனர்.

இந்த மறியலின் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து திம்பம், ஆசனூ‌ர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களை பண்ணாரியில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுந்தரராஜன், காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் மணிவர்மன் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட காவ‌ல் படை‌யின‌ர் தடுத்து நிறுத்தினர்.

காலை ஒன்பது மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்ட வானங்கள் மதியம் 12 மணிக்கு விடப்பட்டது. இதனால் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகா அமைப்பினரின் இந்த திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்