ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் கொ‌ட்ட‌ப்போகு‌ம் பணமழை!

செவ்வாய், 6 மே 2008 (15:22 IST)
இந்தியன் பிரீமியர் லீகிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவையடுத்து, ஐ.பி.எல். அடுத்த சீசனில் நட்சத்திர வீரர்களுக்கான அதிகபட்ச ஏலத்தொகை சுமார் ரூ.61 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த தொகை ரூ.20 கோடிக்கும் சற்று அதிகமாக உள்ளது. பணம் அதிகம் முதலீடு செய்யும் முதலாளிகள் முன்னணி வீரர்கள் அனைவரையும் தங்கள் அணிக்காக ஏலம் எடுப்பதிலிருந்து தடுக்க ஐ.பி.எல். நிர்வாகம் இந்த தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயித்திருந்தது.

ஆனால் தற்போது இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு ஆதரவு பெருகியுள்ளதால் அடுத்த சீசனில் தொகை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஐ.பி.எல். தலைவர் ஆஸ்ட்ரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இந்த உயர்வு குறித்து உடன்பாடான கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தற்போது ஆஸ்ட்ரேலியாவிற்கு சென்றுள்ள ஐ.பி.எல். வீரர்களான மேத்யூ ஹெய்டன், பிரட் லீ ஆகியோரும் ஐ.பி.எல். தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐ.பி.எல். வீரர்களுக்கு அளிக்கும் ஊதியத் தொகை பனிக் கட்டியின் முகடு மட்டுமே என்று மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்