உனக்கு நீயே எஜமான்

விஷயங்கள், சூழ்நிலைகள், வாழ்வின் எல்லா இயக்கங்களும், செயல்களும் உணர்வின்மேல் உண்டாக்கும் விளைவு அநேகமாக முற்றிலு‌நாம் இவ்விஷயங்கள்பால் கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்திருக்கும் உணர்வுநிலை ஒன்றுள்ளது. விஷயங்கள் தம்மளவில் நல்லவையோ கெட்டவையோ அல்ல என்பதை அறியும் அளவிற்கு உணர்வு பெறும் நேரம் ஒன்று உள்ளது: நம்மைப் பொறுத்தமட்டிலேதான் அவை நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கின்றன; அவற்றினால் நம்மீது ஏற்படும் விளைவு முற்றிலும் அவற்றின்பால் நாம் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்ததாகவே இருக்கும்.

webdunia photoWD
அதை இறைவனது கொடையாக இறைவனது அருளாக முழு இசைவின் விளைவாக நாம் எடுத்துக் கொண்டோமானால் நாம் அதிக உணர்வு பெறவும், அதிக வலிமை பெறவும், அதிக உண்மையானவர்களாக ஆகவும் உதவும்; ஆனால் அதையே சிறிதுகூட மாற்றமில்லாமல் அதேமாதிரி சூழ்நிலை - அதையே விதியின் அடியாக, நமக்குத் தீங்கிழைக்க விரும்பும் தீய சக்தியாக எடுத்துக் கொண்டோமானால் அது நம்மைச் சுருங்கச் செய்யும், சோர்வடையச் செய்யும், நம்மிடமிருந்து உணர்வையும் வலிமையையும் இசைவையும் போக்கிவிடும், இருப்பினும் சந்தர்ப்பமோ மிகத்துல்லியமாய் அதே மாதிரியானதே - நீங்கள் எல்லோரும் இந்த அனுபவம் பெற வேண்டும்; ஏனெனில் இந்த அனுபவம் பெற்றால், நீ சுதந்திரமாயிருப்பாய். உனக்கு நீயே எஜமானனாக இருப்பாய் அல்லது சூழ்நிலைகள் உன் கட்டுப்பாட்டிற்கு அடங்கியவையாக இருக்கும்.

இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது‌; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.

இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.

இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.

நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.

வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)