மகரவிளக்கு கால பூஜை நிறைவு பெறுகிறது

செவ்வாய், 20 ஜனவரி 2009 (12:53 IST)
சபரிமலையில் ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜை இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு கால பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 21 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்று மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

நேற்று இரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்தது. கடைசி நாளாகையால் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து சென்றனர். பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இன்று காலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டதும் பந்தளம் மன்னர் பிரதிநிதி அனிழம் திருநாள் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசித்தார். இதனை தொடர்ந்து 7 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்