த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : மகரம்

சனி, 21 ஏப்ரல் 2012 (20:07 IST)
FILE
வெளிப்படையாக மற்றவர்களை விமர்சிப்பதைக் கூட விரும்பாத நீங்கள், விரக்தியடைந்து வருபவர்களை கனிவான பேச்சால் கரையேற்றுபவர்கள். மேல் தட்டு மக்களை விட குடிசையில் வாழ்பவர்களுக்காக அதிகம் யோசிப்பீர்கள். கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். கற்பனையில் சிறகடித்து கதை, கவிதை வடிக்கும் நீங்கள் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர பறவைகள். உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள்.

உங்கள் பிரபல யோகாதிபதி சுக்ரன் ஆட்சிப் பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த நந்தன ஆண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன்-மனைவி இனி ஒன்று சேர்வார்கள். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் குடியிருந்தீர்களே! அந்த நிலை மாறும். ஓரே வீட்டில் இருந்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் மனஇறுக்கத்துடன் காணப்பட்டீர்களே! இனி மனம் விட்டு பேசுவீர்கள். வீடு களைக்கட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய மனிதர்கள் உதவுவார்கள்.

ஆனால் உங்களுக்கு பனிரெண்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் அதிகப்பணம் இருப்பதாக நினைத்து பலரும் தொந்தரவு தருவார்கள். வைகாசி மாதத்தில் தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

பிள்ளைகளின் திருமணத்தை பெரிய மனிதர்களை அழைத்து நடத்தவேண்டுமென வெகுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் வி.ஐ.பிகள் கலந்து கொள்வார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி கம்பீரமாக கலந்து கொள்வீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றிவிட்டு நவீனரக வாகனத்தில் வலம் வருவீர்கள். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் தொடர்வதால் சகோதரங்களுடன் சண்டை, சச்சரவு வரும். செலவுகளும், சொத்துப் பிரச்சனைகளும், சிறுசிறு விபத்துகளும், விலையுயர்ந்த பொருட்களின் இழப்பும் வந்துப் போகும். அரசு சம்பந்தபட்ட காரியங்களில் அலட்சியம் வேண்டாம். சொத்து தகராறு வந்துபோக்கும்.

17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் தாயாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தாய்மாமன், அத்தை வழியில் உதவிகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சென்று அதற்கான பலன் இல்லையே என்று வருந்தினீர்களே, கவலை வேண்டாம் வாரிசு உருவாகும். கைநிறைய சம்பத்துடன் புது வேலையில் அமர்வீர்கள். உங்களின் குடும்ப வருமானம் உயரும். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். எப்போதும், எங்கும் பிரச்னையாக இருப்பதாக புலம்பினீர்களே! இனி அமைதி உண்டாகும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது, என்பதை புரிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். கலை, இலக்கியம் இவற்றில் மனம் ஈடுபாடு கொள்ளும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன பிரச்சனையெல்லாம் பெரிதாக வெடித்ததே! இனி பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அம்மாவின் நெடுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். ஆனி மாதப் பிற்பகுதியில் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை சேரும். ஆடி மாதத்தில் வீண் செலவு, அலைச்சல், பிள்ளைகளால் தொந்தரவு வரக்கூடும். சிறுசிறு விபத்துகள், மனைவிக்கு உடல் நலக்குறைகள் வந்துப் போகும். உடனிருந்து உபத்திரம் கொடுத்தவர்களை ஒதுக்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி 9-ம் வீட்டிற்குள் நிற்பதால் கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். 12.9.2012 முதல் 10-ம் வீட்டிற்குள் சனி நுழைவதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும். அவருடன் இருந்த பனிப்போர் விலகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர் என்றெண்ணி சில வேலைகளை சிலரிடம் ஒப்படைத்து நட்டப்பட்டீர்களே! இனி நேரடியாக எந்த வேலையையும் நீங்களே செய்வது நல்லது.

வெளிவட்டாரத்தில் உங்களின் புகழும், கௌரவமும் ஒரு படி உயரும். அலட்சியப்படுத்தியவர்கள் இனி முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு பிறக்கும். தர்ம காரியங்களில் ஆர்வம் பிறக்கும். 2.12.2012 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்கு செல்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்களும் வந்துப் போகும். ஆனால் பதவி உயரும். சம்பளம் கூடும். நான்காம் வீட்டிற்கு கேது வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். பல காரியங்களில் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் தேர்ச்சி அடைந்து புது வேலையில் சென்று சேர்வீர்கள். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே! இனி விரைவிலேயே கெட்டி மேளம் தான். காதல் இனிமைக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மாணவர்களே! மாணவர்களே! பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே! இனி ஆசிரியர் பாராட்டும்படி முதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

வியாபாரிகளே! தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினீர்களே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். சந்தை நிலவரத்தின்படி செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டிட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை விட்டுப் பிடியுங்கள்.

உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல், குடும்பத்தையும் சரிவர கவனிக்க முடியாமல் நிறுவனத்திற்காக உழைத்து ஓடாய் தேய்ந்தீர்களே! இனி பதவி உயரும். அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே! செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே! வைகாசி அல்லது ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணினி துறையினர்களே! இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் வருட மத்தியில் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! போட்டி அரசியல் நடத்திக்கொண்டு, இருந்த சேமிப்பையும் கரைத்தீர்களே! இனி தாய்கழகத்தில் இணைவீர்கள். தேர்தல் களத்தில் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த பணம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்து போங்கள்.

விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிர் செய்யுங்கள். பம்புசெட்டுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்கும். வாய்க்கால்-வரப்புச் சண்டை தீரும். வற்றிய கிணறு சுரக்கும்.

இந்த நந்தன ஆண்டு வறண்டிருந்த பணப்பையை நிரப்புவதுடன் வாழ்வில் புதிய சகாப்பதத்தை படைக்கும் வல்லமையை தரும்.

பரிகாரம்:
சிவன். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்