த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : கன்னி

சனி, 21 ஏப்ரல் 2012 (19:43 IST)
FILE
மண்ணை பார்த்தோ, மற்றதை பார்த்தோ பேசாமல் கண்ணைப் பார்த்தும் கருத்துகளை பார்த்தும் பேசிப் பழக்கப்பட்டவர்கள் நீங்கள். கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல் கிடைத்தத் துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். எதார்த்தமான பேச்சால் எல்லோரையும் தன்வசப்படுத்தும் உங்களுக்கு இலவசம் பிடிக்காது. தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறி சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள். பாவப்புண்ணியம் அடிக்கடி பார்க்கும் நீங்கள் யாருக்கும் மனமறிந்து துரோகம் நினைக்காதவர்கள்.

உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குறை கூறிக் கொண்டிருந்த உறவினர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். வருடம் பிறக்கும் போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுபாடு அதிகரிக்கும். கடனை நினைத்து அவ்வப்போது கவலை படுவீர்கள். புது கடன் வாங்கும் யோசனையை கைவிடுங்கள்.

சித்திரை, வைகாசி மாதத்தில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகளுக்கு பல இடத்திலிருந்து வரன் வந்தும் முடியாமல் தள்ளிக் கொண்டே போனதே! இனி கல்யாணம் கூடி வரும். சொந்தம் பந்தங்கள் வியக்கும்படி கோலாகலமாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். சகோதர சகோதரிகளால் கடந்த வருடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளெல்லாம் நீங்கும். ஆனால் 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 12-ம் வீட்டில் தொடர்வதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனமனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எதையோ பறி கொடுத்தது போல மனதில் தோன்றும். தூக்கம் கெடும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

17.5.2012 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பணவரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. வெளிவட்டாரத்தில் உங்களை உதாசினப்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்துடன் உல்லாச பயணங்கள் சென்று வருவீர்கள். தாய் மாமன், அத்தைவழியிலிருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். வாக்கு கொடுத்து விட்டு தடுமாறினீர்களே! இனி சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை இனி நிறைவேற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். எதிர்த்தவர்கள் வீழ்வார்கள். விலையுயர்ந்த ரத்தினம், தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் தீரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறுசிறு விபத்து, காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வாடகை வீட்டிலேயே காலம் கழிந்துவிடுமோ, என்று அவ்வப்போது புலம்பித்தவித்தீர்களே! சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். இசை, இலக்கியத்தில் உங்கள் மனம் இளகும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். மாதம் மாதம் செலவு வைத்த வாகனத்தை மாற்றி விட்டு லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். அண்டை வீட்டாருடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அவர்களின் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சனிபகவான் 13.4.2012 முதல் 11.9.2012 வரை ஜென்மச்சனியாக இருப்பதால் சலிப்பு, சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 12.9.2012 முதல் பாதச்சனியாக தொடர்வதால் திடீர் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து தக்க வைத்துக் கொள்ள நேரிடும். கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்காதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. கண் எரிச்சல், பல் வலி வந்துபோகும்.

முடிந்தவரையில் வறுத்த-பொரித்த அசைவ உணவுகள், வாயு பதார்த்தங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள். சப்பாத்தி, முருங்கைக் கீரையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். சில நேரங்களில் தூக்கமில்லாமல் தவிப்பீர்கள். நேரம் கிடைக்கும் போது நடைபயிற்சி செய்யுங்கள். உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பொங்குச்சனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகமும், வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களைச் சந்திப்பீர்கள்.

பெற்றவர்கள், உற்றவர்கள் என்றில்லாமல் மற்றவர்களிடத்தும் பெயர் கெட்டுப் போனதே! இனி எல்லோரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். 2.12.2012 முதல் ராகு உங்கள் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். இரவு நேர பயணங்கள் வேண்டாமே. சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

கன்னிப்பெண்களே! ஏழரைச்சனி தொடர்வதால் காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். மொபைல் போனில் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. பேஸ்புக், ஈமெயிலிலும் கண்டபடி உளறவேண்டாம். எந்த ஒரு முடிவுகளையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். தலைச்சுத்தல், கண் எரிச்சல் விலகும்.

மாணவர்களே! விடைகளை எழுதி பாருங்கள். அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு விலகுங்கள். கவிதை, கட்டுரைப்போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

வியாபாரிகளே! லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே! இனி அவர்களை மிஞ்சுவீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்று தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷ்னரி, கமிசன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்களை விட வயதில், அனுபவத்தில், கல்வித்தகுதியில் குறைவானவர்களை வைத்துக் கொண்டு உங்களை ஒதுக்கித் தள்ளினார்களே! இனி மேலதிகாரியை திருப்திபடுத்தும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வருடமுற்பகுதியே கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவார்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். அடிக்கடி தொகுதிப் பக்கம் போய் நிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்களே! பரிசு, பாராட்டு கிடைக்கும். என்றாலும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள்.

விவசாயிகளே! மகசூலை பெருக்க நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.

இந்த தமிழ் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.

பரிகாரம்:
பெருமாள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்