த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : சிம்மம்

சனி, 21 ஏப்ரல் 2012 (19:18 IST)
FILE
கிளம்பினா சிங்கம் போல, கம்பீரமாக கிளம்புவீர்கள். இல்லேன்னா ஆட்டைப் போல அடங்கிக் கிடப்பீர்கள். ராஜதந்திரிகளான நீங்கள் சமயோஜித புத்தியால் சாதிப்பவர்கள். சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சமாட்டீர்கள். மற்றவர்கள் முயன்று முடியாது என ஒதுக்கித் தள்ளிய விஷயத்தை கையிலெடுத்து முடித்துக் காட்டுவீர்கள். கலகலப்பாகப் பேசும் நீங்கள் அவ்வப்போது கறாராகவும் நடந்துக் கொள்வீர்கள்.

இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் சாதனைப் பட்டியல் நீளும். நெடுநாளாக நினைத்திருந்த வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்சனைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைவரம் வேண்டி கோவில் கோவிலாக அலைந்தீர்களே, மாறி மாறி சிகிச்சைக்கும் சென்றீர்களே! கவலை வேண்டாம். குழந்தை பாக்யம் உண்டு.

எலியும் பூனையுமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொண்ட கணவன்-மனைவி இனி நகமும் சதையுமாக ஒற்றுசேருவீர்கள். மகனுக்கு நல்ல இடத்திலிருந்து பெண் அமைவார். மனக்குழப்பங்கள், வீண் டென்ஷன் விலகும். கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் தள்ளிப் போய் கொண்டிருந்ததே, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சிறப்பாக முடியும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். கோவில் விழாக்களில் மரியாதை கிட்டும். ஒருவேளை சாப்பாடுகூட நிம்மதியாக சாப்பிடமுடியவில்லையே என்று பல நேரங்களில் புலம்பித் தவித்தீர்களே! வாயிருந்தும் ஊமையாயமௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்களே! அந்த அவல நிலை இனி மாறும்.

13.04.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் அடிக்கடி கோபப்பட்டு பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களால் எந்தவித பயனுமில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு வழக்குத் தொடுக்காமல் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பது நல்லது.

17.5.2012 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால் எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பின்னரே முடிக்க வேண்டியது வரும். வீண்பழி, ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது மனதை வாட்டும். பதவிகளை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும். யாரையும் நம்பி எந்த பணியையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனி, தை மாதங்களில் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புது வாகனத்தில் வலம் வருவீர்கள். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

சனிபகவான் 11.9.2012 வரை பாதச்சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கறாராக இருங்கள். நான் செய்து தருகிறேன் என்று யாருக்கும் உறுதிமொழி தராதீர்கள். கால்வலி, இடுப்புவலி, மன உளைச்சல் வந்துபோகும். 12.9.2012 முதல் சனிபகவான் 3-ம் வீட்டிற்குள் நுழைவதால் புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள். வேற்று மொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வேலை தேடி அலையும் உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோவிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக்கடனையும் முடிப்பீர்கள்.

2.12.2012 முதல் ராகு 3-ம் வீட்டிற்குள் நுழைவதால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். பிரபலங்களால் உதவி கிடைக்கும். அவர்களின் சுபநிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிகக்ப்படும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். சிலர் வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு குடிபுகுவார்கள். வங்கியில் லோன் கிடைக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். தந்தைவழி உறவினர்களால் மன உளைச்சல், செலவுகள் அதிகரிக்கும். இரவு நேர-நெடுந்தூர பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலர்ஜி வந்து நீங்கும். நண்பர்களிடம் நல்லதை எடுத்துச் சொல்லப் போய் சில சமயங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.

ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீனரக எலக்ட்ரானிக்ஸ், சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வெகுகாலமாக சொந்த வீடு வாங்க வேண்டும் நினைத்துக் கொண்டிருந்தீர்களே, அது இப்பொழுது நிறைவேறும். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், யோகா செய்யுங்கள். மார்கழி மாதத்தில் அரசு விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பணவரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பாக பேசினாலும் அவர்களிடத்தில் குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
கன்னிப்பெண்களே! புதிய நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். மாதவிடாய்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.

மாணவர்களே! வழக்கபோல அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதி பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.

வியாபாரிகளே! போட்டியாளருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணரினீர்களே! சிலரின் தவறான ஆலோசனையால் முதலுக்கே மோசமானதே! இனி உங்களின் திறமையால் லாபமீட்டுவீர்கள். நல்ல பணியாளர்களை சேர்ப்பீர்கள். கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பழைய சரக்குகளை வந்த லாபத்திற்கு விற்று புது கொள்முதல் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் உதவி கிடைத்து கடையை, வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! 17.5.2012 முதல் குருபகவான் 10-ல் அமர்வதால் சிறுசிறு அவமானங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். சில சமயங்களில் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்துப் போகும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதற்கு முக்கியத்துவம் தராதீர்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். அலுவலக ரகசியங்களையோ, மேலதிகாரியைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கணினி துறையினர்களே! செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு தாவாதீர்கள். சக ஊழியர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போரில் பங்கேற்காதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ளவேண்டாம். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள்.

கலைஞர்களே! அரசால் கவுரவிக்கப் படுவீர்கள். மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.

விவசாயிகளே! வண்டுக்கடி, பூச்சி மற்றும் எலித் தொல்லை நீங்கி மகசூல் கூடும். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.

இந்த தமிழ் புத்தாண்டு திடீர் யோகத்தையும், வசதி வாய்ப்புகளையும், பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி. ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்