த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : மிதுனம்

சனி, 21 ஏப்ரல் 2012 (18:52 IST)
FILE
தொலை தூரச் சிந்தனை கொண்ட நீங்கள், சிறு வயதிலேயே பெரிய கனவுகள் காண்பவர்கள். இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழகமாட்டீர்கள். தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசும் நீங்கள், எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோவையாக வெளியிடுவதில் வல்லவர்கள். இலக்கை எட்டிப் பிடிக்க இரவுபகல் பார்க்காமல் உழைக்கும் நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். குழந்தைகளை கண்டால் குதுகளிக்கும் உங்கள் மனசின் ஓரத்தில் விளையாட்டுத்தனமும் விளைந்திருக்கும்.

உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த நந்தன வருடம் பிறப்பதால் பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் வீண் சச்சரவுகளும், உறவினர்களால் தொல்லைகளும் வந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மகனுக்கு உங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடி நல்ல மணப்பெண் அமைவார். குழந்தை வரம்வேண்டி கோவில் குளமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தீர்களே! இனி கவலை வேண்டாம். அழகான வாரிசு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இனி ஓடி வந்து உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சித்திரை மாதத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்தக் கடனை போராடி பைசல் செய்வீர்கள். சகோதர சகோதரிகள் வசதி வாய்ப்புகளோடு இருந்தும் நமக்கு உதவி செய்யலையே, என வருந்துனீர்களே, இனி உங்கள் நிலையறிந்து சகோதரங்கள் ஆதரவு தருவார்கள். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். கோட்டைவிட்ட பழைய சந்தர்ப்பங்களைத் திரும்பப் பெற்று சாதுர்யமாக முடிப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் உங்களுக்கென்று தனி அந்தஸ்து கிடைக்கும். நாடாளுபவர்களஅறிமுகமாவார்கள். உற்றார், உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். சொந்த ஊரில் கோவில் திருவிழாக்களை தலைமை தாங்கி நடத்துவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சவாலான வேலைகளையும் செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். சாலையை கடக்கும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். கூடாநட்பை இக்காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகி நெருக்கமாக பேசுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்சனை வந்துபோகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். 12.9.2012 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீக சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள்.

2.12.2012 முதல் கேது லாபவீட்டிற்கு வருவதால் ஷேர் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். ராகு 5-ம் வீட்டிற்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. உங்களின் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். அவ்வப்போது உங்கள் மீது எரிந்து விழுவார்கள். அனுசரித்துப் போங்கள். சிலர் தங்களது பிள்ளைகளை உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும்.

ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் என எதிலும் வெற்றி கிட்டும். இனி செலவுகளை குறைத்து சிக்கனத்துடன் சேமிக்கத் தொடங்குவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்களை விரும்பி படிப்பீர்கள். 2.12.2012 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மெடிஸ்கேன் மூலம் கண்காணிப்பது நல்லது. எடைமிகுந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

கன்னிப் பெண்களே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். காதல் இனிக்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

வியாபாரிகளே! சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் வளைந்துகொடுத்து போவார்கள். வேலையாட்கள் இனி புரிந்து கொள்வார்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆவணி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்தகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

உத்யோகஸ்தர்களே! சக ஊழியர்கள் மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.

கலைஞர்களே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். புதியவர்களையும் அனுசரித்துப் போங்கள். சின்ன சின்ன முரண்பாடுகள் வந்து நீங்கும்.

விவசயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன் படுத்துங்கள். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.

இந்த புத்தாண்டு முதல் முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:
பெருமாள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொடுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்