த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : ரிஷபம்

சனி, 21 ஏப்ரல் 2012 (18:44 IST)
FILE
காரசாரமாக கை ஓங்கிப் பேசத் தயங்கும் உங்கள் உள்மனசில் எப்போதும் காதல் கசிந்து கொண்டிருக்கும். வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலை கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத்தெரிந்தவர்கள். பயிற்சி இல்லாமலே பாடும் குயிலைப் போல இயற்கையாகவே இசை, கவிதை ஞானம் உங்களுக்குண்டு. மண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும் வாரி பூசிக் கொள்ளாமல் தூரத்தில் வைத்து அழகு பார்ப்பீர்கள்.

உங்கள் சுகாதிபதியின் நட்சத்திரத்தில் இந்த நந்தன வருடம் பிறப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். ஆனால் எட்டாவது ராசியில் பிறப்பதால் வீண் அலைச்சலும், உடல் சோர்வு, சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். இனி வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகளை செய்து கொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் இருவருக்குள்ளும் கலகமூட்டிய உறவினர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

உங்கள் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து, சொந்தம் பந்தங்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வேலையில்லாததால் விரக்தியாய் இருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வங்கிக் கடனை எப்படி அடைப்பது என வருந்தினீர்களே! இனி அதற்கான வழி கிடைக்கும்.

17.5.2012 முதல் குருபகவான் ராசிக்குள் ஜென்ம குருவாக வருவதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். அடித்துப் போட்டார் போல உடம்பெல்லாம் அசதியாக இருக்கும். வயிற்றுவலி, தொண்டை புகைச்சல், நெஞ்சு எரிச்சல், பார்வைக் கோளாறு வந்து போகும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. முன்கோபம், டென்ஷனால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். ஓய்வின்றி உழைத்தும் கையில் நாலுகாசு தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்துப் போகும்.

குறிப்பாக ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 30.6.12 முதல் வருடம் முடியும் வரை ரோகிணி நட்சத்திரத்திலேயே குரு செல்வதால் ஆரோக்யத்தில் அலட்சியம் வேண்டாம். மனஇறுக்கம், எதிலும் ஒருவித பதட்டம் வந்து நீங்கும். வறுத்த, பொறித்த மற்றும் வெளி உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். இந்த ஒருவருடத்திற்கு ஊறுகாய் வேண்டாமே! உள்மனதில் எழும்பும் இனந்தெரியாத பயத்தை போக்க தியானம் யோகா செய்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

ஆடி, ஆவணி மாதங்களில் குழந்தை இல்லையே என வருந்திக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். வர வேண்டிய பணமும் தக்க சமயத்தில் வந்து கைகொடுக்கும். என்றாலும் பழைய படி தடபுடலான செலவுகள் வேண்டாமே! அரைகுறையாக நின்றுப் போன கட்டிடவேலைகளையும் இனி விரைந்து முடிப்பீர்கள்.

23.6.2012 முதல் 14.8.2012 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வருட பிற்பகுதியில் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் அவ்வப்போது அலைச்சலும், மன வருத்தமும் வந்து போகும். அவர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். இழுபறியான பல வேலைகளை அதிரடியாக முடித்துக் காட்டுவீர்கள். 11.9.2012 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் வீண் அலைச்சல்,டென்ஷன் அதிகரிக்கும். அவர்களின் நட்பு வட்டாரத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். தொலைத்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

12.9.2012 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்கள்,கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. அடிமனதிலிருந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

2.12.2012 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். ஆனால் கேது 12-ல் நுழைவதால் ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சில நாட்களில் கனவுத் தொல்லையால் தூக்கம் இல்லாமல் போகும். 2.12.2012 முதல் 6-ம் வீட்டிற்கு ராகு வருவதால் வி.ஐ.பிகள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்குகள் சாதகமாகும்.

சனியுடன் ராகு 2.12.2012 முதல் 13.4.2013 வரை நீடிப்பதால் யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களின் பேச்சை நம்பி அதிரடியான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வாகனத்தை இயக்கும்போது கவனத்தை சிதறவிடாதீர்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அரசியல்வாதிகளுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தலைமையிடத்தில் மதிப்பு கூடும். ஆன்மீகநாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். சித்தர்கள்,ஆன்மீகவாதிகளின் ஆசி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். முகப்பரு,தூக்கமின்மை விலகும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு.

மாணவ-மாணவியர்களே! புத்தகத்தை திறந்தாலே தூக்கம் வந்ததே! அந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

வியாபாரிகளே! முழி பிதுங்கி நின்றீர்களே! கடன் வாங்கி தொழில் தொடங்கி நட்டப்பட்டீர்களே! வேலையாட்களும் அவ்வப்போது தொல்லை தந்தார்களே! இந்த நிலையெல்லாம் இனி மாறும். சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த பல சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மருந்து, இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! இனி உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப்பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கணினி துறையினர்களே! வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும்.

அரசியல்வாதிகளே, கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். தேர்தலில் வெற்றியுண்டு.

கலைத்துறையினர்களே! நிலையான வருமானமில்லாமல் தவித்தீர்களே! இனி சேமிக்கும் அளவிற்கு வருமானம் உண்டு. பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் படைப்புக்கு அரசு விருது உண்டு.

விவசாயிகளே, வாய்க்கால்,வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். வங்கியில் கடன் கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள்.

இந்த நந்தன வருடம் வேலைச்சுமையையும், திடீர் பயணங்களையும் தந்தாலும், பணவரவையும், புகழ், கௌரவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் அல்லது வியாழக் கிழமைகளில் சென்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் கந்த சஷ்டி கவசம் தினமும் படியுங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்