ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌‌சி ரா‌‌சி பல‌ன் : மீனம்

புதன், 21 டிசம்பர் 2011 (16:35 IST)
சுற்றியிருப்பவர்கள் சுகமாய் இருக்க நினைப்பவர்களே! ஆன்மீகத்தில் கரைகண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது உடல் நலக்குறைவும், தடைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம்.

குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. பிள்ளைகள் சில சமயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். மகனின் உயர்கல்வி, உத்‌தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் பெருமையாக பேசிவிட்டு பிறகு விமர்சிப்பார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவிவழியில் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். பழைய கடன் பிரச்சனைகள் அவ்வப்போது மனசை வாட்டும்.

சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உடன்பிறந்தவர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப்பயிற்சியும் இருக்கட்டும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தனாதிபதியும்-பாக்யாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைப்பட்ட வேலைகள் முடியும். குழந்தை பாக்‌கியம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர‌ர்கள் தங்கள் தவறை உணருவார்கள். புது வேலை கிடைக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகனத்தை கவனமாக இயக்குங்கள். கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள் ஆனால் கவனமாக கையாளுங்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அயல்நாடு மற்றும் புகழ் பெற்ற புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களைக்கட்டும். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். வீடு மாறுவீர்கள். உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்தமால் உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள்.

சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வந்து சரியாகும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது புகழ்ப்பெற்ற புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சனைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.

உத்‌தியோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த‌ப் பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை‌ச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறு வந்து நீங்கும். மாணவ--மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களும், வதந்திகளும் வந்தாலும் அஞ்சாதீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

இந்த‌ச் சனி மாற்றம் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒருபக்கம் தந்தாலும் சகிப்புத் தன்மையால் வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்