ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மகரம்

செவ்வாய், 20 டிசம்பர் 2011 (19:24 IST)
மதிப்பவர்களை மதிக்கும் நீங்கள், மீறுபவர்களை மிதிக்க‌த் தயங்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்க‌ள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சனைகளாலும், கவலைகளாலும் திணறடித்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சமாகி யோகாதிபதியான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.

திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பச் சூழ்நிலை அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே! பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே! கையில் நாலு காசு தங்காமல் தண்ணீராக கரைந்ததே! தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி தொட்டது துலங்கும். எங்குச் சென்றாலும் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்தினருடன் நிலவி வந்தப் பனிப்போர் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும்.

பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையார் குணமடைவர். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்சனை முடிவுக்கு வரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதர‌ர்க‌ள் உதவுவார்கள். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் பாராட்டி‌ப் பேசுவார்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்‌கியம் உண்டாகும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் விரயம், பணப்பற்றாக்குறை, தந்தையுடன் மனத்தாங்கல், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். புது வேலை கிடைக்கும். ஆனால் செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய கடன் குறையும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அயல்நாட்டிற்கு சென்று வருவீர்கள். சிலர் இடவசதியுடன், கற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் திருதியாதிபதியும்-விரயாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கோவில் கும்பாபிஷேகத்தை சொன்ன படி நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து சேர்க்கை உண்டு. புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால் வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுப்படுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்‌தியோகத்தில் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. அது சாதகமாக அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நிலை குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள்.

இந்த‌ச் சனி மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வைக்கும்.

பரிகாரம்:
பிள்ளையார் பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வசதிப் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்