ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌‌ன் : கடகம்

வெள்ளி, 16 டிசம்பர் 2011 (17:30 IST)
கலை உணர்வும், நிர்வாகத் திறனும் கொண்ட நீங்கள், அதர்மங்களை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் 8-ம் வீட்டிற்கு அதிபதியாக சனி அமைவதால் உங்கள் மனைவி கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாப் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொல்லை தரும்.

விலை உயர்ந்தப் பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை வெடிக்கும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் விசா கிடைத்து சாதகமாக அமையும்.

பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் குடும்ப அந்தரங்க விஷயங்களை விவாதிக்க வேண்டாம். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். புளி ஏப்பம், அல்சர் வரக்கூடும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணபலம் கூடும். உங்கள் யோகாதிபதிகளான செவ்வாய், குருபகவானின் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சனி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் குடும்பத்தில் சலசலப்பு, கடன் பிரச்னை, வாகன விபத்து, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வி.ஐ.பி.களுடன் கருத்து மோதல், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.

உங்கள் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, வாகன வசதி பெருகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வெளியில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

வியாபாரத்தில் கறாராக இருங்கள். போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேற்று மதத்தினர், நாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடர்புகள் வந்தமையும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும், கருத்து மோதல்களும் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

உத்‌தியோகத்தில் சூழ்ச்சிகளை‌த் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகள் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் வந்துச் செல்லும். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தடுமாற்றம் வரும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவ-மாணவிகளே! விளையாட்டுத் தனத்தை விட்டு விடுங்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை சொல்லிப் பார்ப்பது நல்லது. கலைஞர்களே! தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் புது வாய்ப்பு வரும்.

இந்த‌ச் சனி மாற்றம் இடையிடையே அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் முடிவில் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்:
கஞ்சனூர் அருகிருலுள்ள திருக்கோடி காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்