ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மிதுனம்

புதன், 14 டிசம்பர் 2011 (16:29 IST)
இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் நீங்கள், எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே! அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! தாயார் உடல் நிலை பாதித்ததே! தாயாருடன் கருத்து மோதல் வந்ததே! உத்‌தியோகத்திலும் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாயாரின் புலம்பல் குறையும். அரைகுறையாக நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமாக செய்வீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சாதாரணமாக பேசினாலே கணவன்-மனைவிக்குள் சண்டை வந்ததே! இனி மணிக்கணக்கில் பேசினாலும் மனவருத்தம் ஏற்படாது. 5-ம் இடத்தில் சனி அமர்வதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்‌கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும் போது நிதானம் தேவை. அலைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் எதார்த்தமாக பேசுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பேசுங்கள். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் அவர்களின் நண்பர்கள் யார் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்விப் பெற அனுமதியுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள். வயிற்று வலி, இடுப்பு கழுத்து வலியால் சிரமப்பட்டீர்களே! இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும்-லாபாதிப‌தியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் பழைய கடனைத் தீர்ப்பதற்கு புது வழிப் பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரை மாற்றுவீர்கள். தொண்டை புகைச்சல், யூரினரி இன்பெக்சன், காய்ச்சல் வந்து நீங்கும். 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்‌கிரமடைவதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை எடுத்துக் கட்டி செய்வீர்கள். புது டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். என்றாலும் அவர்களால் செலவுகளும் அதிகரிக்கும். சில நேரங்களில் மனைவிக்கு தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சந்தேகம் வராத அளவிற்கு நீங்கள் பேசுவது நல்லது. வேலை கிடைக்கும். உத்‌தியோகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள்.

சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வந்து நீங்கும். சனிபகவான் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர் உதவுவார். உயர்ரக வாகனங்கள் சேரும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய சரக்குகள் விற்கும். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வி.ஐ.பி.கள் வாடிக்கையாளர்களாவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமையை குறைத்து எடைபோட்டார்களே! இனி அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள். இதனால் சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறை மாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! கூடா‌ப்பழக்க வழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். மாணவ-மாணவிகளே! அலட்சியம் நீங்கும். வகுப்பறையில் அரட்டைப் பேச்சுக் குறையும். விளையாட்டில் பதக்கம் உண்டு. கலைஞர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் பெற்ற பெரிய கலைஞர்கள் உங்களைப் பாராட்டிப் பேசுவார்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்கள் நட்பு வட்டத்தை விரிவுப்படுத்துவதுடன் எதிலும் விவேகமாக செயல்பட்டு சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:
புது‌ச்சே‌ரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவ-மாணவியரின் படிப்பிற்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்