குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மேஷம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:20 IST)
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். இதுவரை 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பழிவாங்கினாரே! குருபகவான். கையில் பத்து காசு தங்க விடாமல் அடுத்தடுத்து செலவுகளிலும், பிரச்னைகளிலும் சிக்க வைத்தாரே! இனி அந்த நிலை மாறும்.

15.12.2009 முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் லாப வீட்டில் வந்தமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சந்தேகத்தின் பேரில் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித சோம்பலும், அலட்சியமும் இருந்ததே! இனி பல வேலைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கும் அளவிற்கு சுறுசுறுப்பாவீர்கள்.

தாமரை இலையும் தண்ணீரும் போல மனைவி, மக்களுடன் ஒட்டாமலிருந்தீர்களே! இனி கலகலப்பாக பேசுவீர்கள். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். பார்த்தும் பார்க்காமல் போய்‌க் கொண்டிருந்த பிரபலங்கள் நின்று நேரம் ஒதுக்கி உங்களிடம் பேசுவார்கள். நாடாளுபவர்கள் நண்பர்களாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும், அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள்.

குரு பகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொந்த ஊரில் வீடு கட்டுவீர்கள். மகளுக்கு எவ்வளவோ வரன் பார்த்தும் உங்கள் ரசனைக்கேற்ப அமையாமல் போனதே! இனி அழகு, அறிவு அந்தஸ்துள்ள வரன் அமையும். ஊரே வியக்கும்படி கல்யாணத்தை நடத்துவீர்கள். வேலை கிடைக்கும். அடிக்கடி இனி மாறாமல் நிரந்தர வேலையில் அமர்வீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.

7-ம் வீட்டை குரு பார்ப்பதால் தலை வலி, கால் வலி குணமாகும். மருத்துவச் செலவுகள் இனி குறையும். இருண்டிருந்த முகம் பளபளப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். அடிமனசில் இருந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வீடு கட்ட, வங்கி‌க் கடன் கிடைக்கும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த சங்கடங்கள் சரியாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்கள் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பதவிகள் தேடி வரும். சொத்து பிரச்னை தீரும். அரசால் ஆதாயம் உண்டாகும். நிர்வாகத் திறமைக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வண்டி வாங்குவீர்கள்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைப்பதன் மூலம் செல்வாக்குக் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், பிள்ளைகளால் மனஉளைச்சலும் வரும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் பாதகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். வீண் பழி, டென்ஷன் வந்து நீங்கும். இக்கால கட்டத்தில் குருபகவான் விரைய ஸ்தானத்தில் செல்வதால் சேமிப்புகள் கரையும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் அநாவசிய பேச்சை குறைப்பீர்கள். அதிரடியாக செயலில் இறங்குவீர்கள். வருமானத்தை உயர்த்த கடையை அழகுப்படுத்துவீர்கள். சில சலுகைத் திட்டங்களையும் அறிவிப்பீர்கள். சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள், பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உணவு, இரும்பு, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெகு நாட்களாக நிலுவையிலிருந்த பாக்கித் தொகைகள் வசூலாகும். உத்யோகத்தில் எத்தனையோ அவமானங்களை சந்தித்தீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். பதவி உயரும். மூத்த அதிகாரி மனம் விட்டு பேசுவார். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரிய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்கள் காதலில் சிக்கி தடுமாறினீர்களே! இனி தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை போல நல்லவர் வாழ்க்கை துணையாக அமைவார். உயர்கல்வியை முடிப்பீர்கள். வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே பாகற் காயாக இருந்த படிப்பு இனி இனிக்கும். ஆசிரியர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். மதிப்பெண் கூடும். புகழ்பெற்ற நிறுவனத்தில் சேர்ந்து உயர்கல்வியை தொடர்வீர்கள்.

அரசியல்வாதிகளே! கோஸ்டி பூசலில் சிக்கி காணாமல் போனீர்களே இனி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள்.

கலைஞர்களே! பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள்.

இந்த குரு மாற்றம் பணம், பதவியைத் தருவதுடன் சமூகத்தில் புது அந்தஸ்தை ஏற்படுத்துவடன் வாழ்க்கையில் புது அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்