குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : ரிஷபம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:15 IST)
உறவினர்களை விட நண்பர்களிடம் மனம் திறந்து பேசுபவர்களே! உட்கார்ந்த இடத்திலேயே உலகியல் சம்பவங்களை அசை போடுபவர்களே! இதுவரை உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு கேட்ட விதத்தில் பணத்தை தந்த குரு பகவான் 15.12.2009 முதல் 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார்.

'ஈசனாரொருபத்திலே தலையோட்டிலேயிரந்துண்டதும்' என்று பழைய பாடல் கூறுகின்றது. பத்தாம் வீட்டில் குரு வந்தால் பதவி, பட்டங்கள் இழந்து பரிதவிக்க வைக்கும் என்றெல்லாம் சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அதிஷ்ட வசமாக குருபகவான் ஒராண்டு காலம் பத்தாம் வீட்டில் அமராமல் 4.5.2010 முதல் 6.11.2010 வரை லாப வீட்டில் அமர்வதால் 10-ம் வீட்டு பலன்கள் குறையும். திடீர் யோகம் உண்டாகும். செல்வாக்குக் கூடும்.

அதோடு மட்டுமல்லாமல் உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 22.5.2010 முதல் 27.9.2010 வரை செல்ல இருப்பதால் வேலை கிடைக்கும். தந்தை வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். தந்தைவழி சொத்துகள் அடைவதில் இருந்த பிரச்னைகள் தீரும்.

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் முகப்பொலிவு கூடும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கூட கைக்கு வரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். தாய்க்கு இருந்த நோய் குணமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற வீண் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் குறையும். வழக்கில் நல்ல வழக்கறிஞரை அமர்த்துவீர்கள்.

15.12.2009 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 வரை உள்ள காலக்கட்டத்தில் பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் வரக்கூடும். எனவே பிள்ளைகளுடன் அதிக நேரம் ஒதுக்கி‌ப் பேசுங்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்கள் 7-ம் வீட்டு அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். இரத்த சோகை, மனைவிக்கு கர்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து வருந்துவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் அமையும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் அட்டம லாபாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், மூத்த சகோதரர்களுடன் மனத்தாங்கல், குடும்பத்தில் சந்தேகம், நண்பர்கள், உறவினர் பகை, எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை, அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றி சிலர் தவறாகப் பேசுவார்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் அரசால் அனுகூலம், திடீர் பணவரவு, மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் நீங்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். அயல் நாடு சென்று உயர்கல்வி தொடர விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வந்து சேரும். உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றியடைவீர்கள்.

வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடுகள் செய்ய வேண்டாம். ஓரளவு லாபம் வரும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசப் பாருங்கள். புது ஒப்பந்தங்கள் தொடர்பாக பத்திரத்தில் கையெழுத்துப் போடும் போது கவனம் தேவை. கெமிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சட்டத்திற்கு புறம்பான வகையில் உங்களை சிலர் அழைத்துச் செல்லக்கூடும். ஏமாறாதீர்கள்.

உத்யோகத்தில் இரவுப் பகலாக உழைத்தும் நல்லப் பெயர் இல்லையே என்ற ஆதங்கம் அடிமனதில் இருக்கும். மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தாலும் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் மத்தியில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது வேலை கிடைக்கும்.

கன்னிப்பெண்கள் மற்றவர்களின் பேச்சை முழுமையாக நம்ப வேண்டாம். சில சமயங்களில் உங்களுடன் நட்பு பாராட்டுவது போல் நடித்து உங்களை ஏதேனும் பிரச்சனைகளில் சிக்க வைப்பார்கள். கவனம் தேவை. மனஉளைச்சல், தூக்கமின்னை வந்து நீங்கும்.

மாணவ-மாணவிகளே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். தயக்கம் காட்டாமல் ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! தகுந்த புள்ளி விவரம் இல்லாமல் எந்த அறிக்கையும் விட வேண்டாம். மாநில அளவில் புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புத் தகராறு தீரும். புது ரக விதைகள் மூலம் மகசூலைப் பெருக்குவீர்கள்.

இந்த குருமாற்றம் தொடக்கத்தில் உங்களுக்கு‌த் தொந்தரவுகள் தந்தாலும், மே மாதத்திலிருந்து எதிர்பாராத திடீர் திருப்பங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் தருவதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்