குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : சிம்மம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:07 IST)
மற்றவர்கள் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யக் கூடிய நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு பகவான் அடி எடுத்து வைப்பதால் இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். குழப்பம், தடுமாற்றம், தயக்கம் நீங்கி தெள்ளத் தெளிவாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள்.

இதுவரை குடும்பத்தில் உள்ளவர்கள்கூட உங்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் அலைக்கழித்தார்களே! சிலர் கண்டும் காணாமல் போனார்களே! கொடுத்த இடத்திலிருந்து பணம் வராமல் செலவுக்கு கையில் காசு இல்லாமல் திண்டாடினீர்களே! சிலர் உங்களை கேவலமாக பேசினார்களே! இப்போது உங்களின் யோகாதிபதியான குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் இனி குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்த சலசலப்புகள், பனிப்போரெல்லாம் நீங்கும். அடுத்தடுத்து வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். மழலை பாக்‌கியத்திற்காக நீங்கள் பார்க்காத மருத்துவரே இல்லை, இனி அழகான வாரிசு கிடைக்கும். அடகிலிருந்த வீட்டு பத்திரத்தை மீட்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு கட்டுவீர்கள். சொத்துப் பிரச்சனை கொஞ்சம் பெரிதாகி பிறகு நல்ல விதத்தில் முடியும்.

குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மூத்த சகோதரருக்கு திருமணம் சிறப்பாக முடியும். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கோபத்தை குறைத்து இனி இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சுக-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தன்னம்பிக்கை பிறக்கும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த சொத்து பிரச்னை சுமுகமாக முடியும். படுத்த படுக்கையாக இருந்த பெற்றோர் நோயிலிருந்து விடுபடுவார்கள். அரைகுறையாக நின்ற வீட்டை கட்டி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக பேசுவார்கள்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திருமணம் உள்ளிட்ட சுபச் செலவுகள் அதிகரிக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை பல வகையிலும் உற்சாகப்படுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். வேலைக் கிடைக்கும். அரசியல் தலைவர்கள் அறிமுகமாவார்கள். சின்ன சொத்தை விற்று பெரிய சொத்து வாங்குவீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் கொஞ்சம் அலைச்சலும், வீண் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் அமையும். கல்வி, உத்‌தியோகம் பொருட்டு பிள்ளைகளை பிரிவீர்கள்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். மனைவிக்கு உடல் நிலை பாதிக்கும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துப் போங்கள். வீண் வாக்குறுதிகள் யாருக்கும் தர வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வறுத்து, பொறித்த மற்றும் அசைவ உணவுகள் வேண்டாமே.

வியாபாரத்தில் அடுத்தடுத்து முதலீடு செய்ய பணமில்லாததால் உற்சாகம் இல்லாமல் ஒரமாய் நின்றீர்களே! இனி கொடுத்து உதவ பலரும் முன் வருவார்கள். தைரியமாக புது வியாபாரத்தில் இறங்குவீர்கள். புதிய சரக்குகளும் கொள்முதல் செய்வீர்கள். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வி.ஐ.பி.கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். நல்ல வேலையாட்களும் அமைவார்கள். உணவு, வாகனம், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் நீங்கும்.

உத்‌தியோகத்தில் ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி அந்த அவலநிலை மாறும். பிரச்சனை தந்த மேலதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புதிய அதிகாரி உங்களை ஆதரிப்பார். பிப்ரவரி, ஏப்ரல், மே மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.

கன்னிப் பெண்களே! உடல் நோயாலும், மனஉளைச்சலாலும் எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! பல இடங்கள் பார்த்தும் திருமணம் தள்ளிப் போனதே! இனி உங்கள் மனம் போல நல்ல வரன் அமைவார். கல்யாணம் விமர்சையாக முடியும். சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி தொடர வாய்ப்பு வரும். நல்ல வேலைக் கிடைக்கும்.

மாணவர்களே! புத்தகத்தை பிரித்தாலே தூக்கம் வந்ததே! இனி சோம்பல், அலட்சியம் விலகும். அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் நட்பு கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். சந்தேகத்தை ஆசிரியரிடம் தைரியமாக கேளுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும்.

கலைஞர்களே! உங்களின் கனவுகள் நனவாகும். உங்கள் படைப்புக்கு அரசு பரிசு தரும். விவசாயிகளே! கரும்பு ஆதாயம் தரும். குறுகிய கால பயிர்களை‌த் தவிர்க்கப் பாருங்கள். மூலிகைப் பயிர்களால் லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு வேண்டப்பட்டவர்களால் அலை‌க்கழிக்கப்பட்டீர்களே! கட்சிக்காக கண்டபடி செலவழித்தீர்களே! இனி தலைமையால் பாராட்டப்படுவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் பழைய பிரச்னைகள், சிக்கல்கள், பணத்தட்டுப்பாடு இவற்றிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் புதிய பாதையில் சென்று சாதிக்க வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்