குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கன்னி

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:04 IST)
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சமமான மரியாதையை தரக் கூடிய நீங்கள் மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குருபகவான் அடியெடுத்து வைக்கிறார். சகட குருவாச்சே! சங்கடங்களையும், சச்சரவுகளையும் தருவாரே!

'சத்தியமாமுனி யாறிலேயிரு காலிலே தலை பூண்டதும்' என்று பழைய நூல் கூறுகின்றது. ஆனால் குருபகவான் தொடர்ந்து 6-வது வீட்டிலேயே தங்காமல் அதிசாரம் மற்றும் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிற்கு செல்வதாலும் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் வீட்டில் அமர்வதாலும் சங்கடங்கள் குறைந்து சந்தோஷத்தையும் நிச்சயம் தருவார்.

15.12.2009 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 வரை குருபகவான் 6-ம் வீட்டில் மறைகிறார். இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், அலைச்சல்கள், அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்துதல், நகைகள், முக்கிய ஆவணங்கள் களவாடப்படுதல், உடல் நலக் குறைவு போன்றவை ஏற்படக்கூடும்.

4.5.2010 முதல் 6.11.2010 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் பணவரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், எதிலும் வெற்றியும் உண்டாகும். குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சமயோஜிதமாக பேசுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சர்க்கரையின் அளவு குறையும். கணவன்- மனைவிக்குள் காரண காரியமே இல்லாமல் காரசாரமான விவாதங்களெல்லாம் வந்ததே! இனி அந்த நிலை மாறும். தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள்.

சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். குரு 12-ம் வீட்டை‌ப் பார்ப்பதால் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற இடம் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வாங்கிய கடனை அடைக்க புது வழி பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சேவக அட்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். மனைவிக்கு நெஞ்சு வலி, தலைச்சுற்றல் வந்து விலகும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். புதிதாக சொத்து வாங்கும் போது அதற்குரிய ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவினங்கள், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். பங்குச் சந்தை, வெளிநாட்டு லாட்டரியில் பணத்தை இழக்க வேண்டாம்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சுக சப்தாமாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சண்டை வரும். பொருள் இழப்பு, மறைமுக விமர்சனம், எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். முன்தேதியிட்டு காசோலை தரும் போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குணமுள்ள மாப்பிள்ளை அமைவார். பாதியிலேயே நின்ற வீடு கட்டுமானப் பணி முழு வீச்சில் முடிந்து சிறப்பாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள். அடிக்கடி தண்டச் செலவு வைத்த வாகனத்தை விற்றுவிட்டு புது வண்டி வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு மனை வாங்குவீர்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் பூர்வ புண்யாதிபதியும், யோகாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைக் கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். ஆனால் மே, ஜூன், ஜீலை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பெருகும். எவ்வளவு அள்ளித்தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என உணர்ச்சிவசப்படுவீர்கள். புரோக்கரேஜ், கம்ப்யூட்டர், உணவு மற்றும் ரசாயன வகைகளால் லாபம் வரும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப் படாதீர்கள்.

உத்யோகத்தில் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வுக்காக உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும். வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் புகழ் கூடும். சக ஊழியர்களால் இருந்து வந்த மறைமுகத் தொந்தரவுகள் நீங்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் பணிகளை விரைந்து முடித்து மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். பசியின்மை, சைனஸ் தொந்தரவு நீங்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத் தனத்தை மறந்து படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நினைவுத்திறனை அதிகப்படுத்த கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கலைஞர்களே! உங்களை ஒதுக்கித் தள்ளிய மூத்த கலைஞர்கள் இனி உங்களுக்கு விருந்தளித்து நட்புறவாடுவார்கள். வீண் வதந்திகள் விலகும்.

விவசாயிகளே! பூச்சிகளை விரட்டுவதற்கே அதிகம் செலவு செய்ய நேரிட்டதே! இனி அந்த அவலநிலை மாறும். நெல், கரும்பு சாகுபடியால் லாபத்தை ஈட்டுவீர்கள். தண்ணீர் வசதி பெருகும்.

அரசியல்வாதிகளே! யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களைச் சுற்றியிருப்பவர்களை‌ப் புரிந்துக் கொள்ள வைக்கும். அலைச்சலுடன் ஆதாயத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்