குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மகரம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:51 IST)
மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபவான் அடியெடுத்து வைக்கிறார். குருபகவான் இப்பொழுது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் இனி சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள். மனசும், உடம்பும் லேசாகும். அடிமனசில் இருந்து வந்த ஒருவித போராட்டம் நீங்கும்.

வீண் சந்தேகத்தால் பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேருவீர்கள். பத்து ரூபாய்க் கூட பையில் தங்காமல் போனதே! இனி பணபலம் உயரும். குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும். தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனி தேடி வருவார்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டாகும்.

இளைத்த உடம்பு பருமனாகும். இரத்த அழுத்தத்தால் தலைச்சுற்றலும், வாயுக்கோளாறால் நெஞ்சுவலியும் வந்ததே! இனி ஆரோக்யம் கூடும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபத்தால் அவசரப்பட்டுப் பேசி நல்ல நண்பர்களையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர வகையில் இருந்த உரசல் போக்கு நீங்கும். இனி பாசமழை பொழிவார்கள். வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்தி, வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் ஆயுள் பயம் நீங்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து சமூக சேவை செய்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். நல்ல வேலை அமையும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சுக-லாபாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு,வாகனம் அமையும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் லேசாக உடல்நிலை பாதிக்கும். அலைச்சல் இருக்கும். கோபத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சேவக- விரயாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உதவுவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். உயர்கல்வி, உத்‌தியோகத்திற்காக பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைவதால் செலவினங்களும், அலைச்சலும் இருக்கும். இளைய சகோதரர்களை அனுசரித்துப் போங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் 3-ல் மறைந்தாலும் உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் அழகு, இளமை கூடும். தொட்டதெல்லாம் துலங்கும். புது சொத்து வாங்குவீர்கள். வாகனம் சேரும். குழந்தை பாக்‌கியம் உண்டாகும். வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் மஞ்சள் நோட்டிஸ் தருமளவிற்கு விழுந்து கிடந்தீர்களே! இனி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு லாபம் பார்ப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் எளிதாக வசூலாகும். பழைய வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மார்ச், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். மருந்து, கமிசன், உணவு, பைனான்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்‌தியோகத்தில் அவமானப்படுத்தப்பட்டீர்களே! இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். எதிர்பார்த்தபடி பதவியுயர்வு,சம்பள உயர்வு எல்லாம் இனி தேடி வரும். மார்ச், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! காதல் தோல்வியிலிருந்து மீள்வீர்கள். தடைபட்ட கல்யாணம் தடபுடலாக முடியும். தாயாருடனான மனஸ்தாபங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மாணவர்களே! புத்தகத்தை திறந்து வைத்து தூங்கியதெல்லாம் போதும். இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டுப் போட்டியில் பதக்கம் உண்டு.
கலைஞர்களே! உங்கள் படைப்பு சர்வதேச அளவில் பேசப்படும். பழைய சம்பளப் பிரச்சனைகள் தீரும்.

விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். எண்ணெய் வித்துக்கள், மூலிகை, மரப்பயிர்களால் லாபமுண்டாகும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தேர்தலில் வெற்றியடைவீர்கள்.

இந்த குரு மாற்றம் விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களை சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் வசந்தத்தையும் அனுபவிக்க வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்