குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கும்பம்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:50 IST)
துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுரு நுழைகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தாற்போல’ அதாவது ஜென்மகுருவாச்சே! என்று கலங்காதீர்கள். குருபகவான் 4.5.2010 முதல் 6.11.2010 வரை உள்ள காலகட்டங்களில் இரண்டாம் வீட்டில் அமர்வதால் இந்த குரு மாற்றத்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

ஆனாலும் 15.12.2009 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.10.2010 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள் செல்வதால் இக்காலகட்டங்களில் எதிலும் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும். உங்கள் குடும்பத்தை உடைக்க சிலர் சதி செய்வார்கள். கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தின் பேரில் சண்டையை உருவாக்க முயற்சிப்பார்கள். அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காதீர்கள். பெரிய நோய்கள் இருப்பது போல பல அறிகுறிகள் தெரியும். பரிசோதித்துப் பார்த்தால் எதுவும் இருக்காது.

ஆனால் அதற்காக அலட்சியமாக இருக்காதீர்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடையும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஜென்ம குரு என்பதால் அடுக்கடுக்காக வேலைச்சுமையும், மன உளைச்சலும் வரும். அவசரப்பட்டு யாரிடமும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு பிறகு அவதிபடாதீர்கள். யாரிடமும் பணம், நகை இரவல் தந்து ஏமாறாதீர்கள். பெரிய பிரச்சனைகள் இருப்பது போல பயம் மனதில் வந்துபோகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெளி உணவுகள் வேண்டாமே. மஞ்சள்காமலை வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்.

4.5.2010 முதல் 6.11.2010 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய் விலகும். ஆரோயக்‌கியம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பிறரிடம் கொடுத்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அரசு சம்பந்தபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. தள்ளிப் போய்‌க்கொண்டிருந்த அயல்நாட்டுப் பயணம் இனி சாதகமாக அமையும்.

குரு பகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் அஷ்டமத்துச் சனியால் அடிக்கடி கர்ப்பச்சிதைவானவர்களுக்கு இனி குழந்தை பிறக்கும். பிள்ளைகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடிப்பீர்கள். குருபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீடு கட்டுவீர்கள். பாக்ய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் வராவிட்டாலும் கடைசி நேரத்தில் கிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சேவக-ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். லேசாக உடல்நிலை பாதிக்கும். அலைச்சல் அதிகமாகும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கோபத்தை குறைக்கப்பாருங்கள். தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறு சிறு விபத்துகள், அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் தன-லாபாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணம் வரும். வேற்று மொழியினர் உதவுவார்கள். இருந்தாலும் அவ்வப்போது மன உளைச்சலும், வேலைச்சுமையும் வந்து செல்லும்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் முகப்பொலிவு கூடும். வி.ஐ.பி.கள் ஆதரிப்பார்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டாகும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். வழக்குகள் சாதகமாகும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் ஏப்ரல் மாதம் வரை லாபம் சுமாராகத்தான் இருக்கும். அனுபவமிக்க வேலையாட்களை இழந்து விடவேண்டாம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். மற்றவர்களின் அறிவுரையை கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். பக்கத்திலிருக்கும் கடைக்காரர்களிடம் அன்பாக பழகுங்கள். மே, ஜூலை, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். மருந்து, உணவு, ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் குடும்ப விஷயங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

உத்‌தியோகத்தில் எதிர்நீச்சல் அடிக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் பழைய பிரச்சனைகளை கிளறினாலும் அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். இடமாற்றம் இருக்கும். மேலதிகாரிகளால் அலை‌க்கழிக்கப்படுவீர்கள். ஆனால் ஜூலை, நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பாதீர்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். மாதவிடாய் கோளாறு, தலைச்சுத்தல், மன உளைச்சல் வந்துபோகும். பாதியிலேயே நின்று போன படிப்பை தொடருவீர்கள். வருட மத்தியில் கல்யாணம் நடக்கும்.

மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் கணிதப்பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதி பாருங்கள். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

கலைஞர்களே! உங்களுக்கு எதிராக கிசுகிசு தொல்லைகள் வரும். என்றாலும் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விவசாயிகளே! படித்துப் பார்க்காமல் எந்த பத்திரத்திலும் கையெழுத்திட வேண்டாம். மரப்பயிர் லாபம் தரும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி மே மாதத்திலிருந்து வெற்றியையும், அட்டமத்துச்சனியால் உண்டாகும் சிரமங்களிலிருந்து காப்பாற்றுவதாகவும் அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்