ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : மேஷம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:23 IST)
நல்லதை வரவேற்கும் நீங்கள், அல்லது நடந்தால் அதை தட்டிக் கேட்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் அனைத்து வகைகளிலும் உதவுவார்கள்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாக பார்க்க விடாமல் தடுத்த ராகுபவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். பதுங்கியிருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும்செய்யமாட்டார்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். என்ன தான் உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே! இனி நாலுகாசு தங்கும்.

ராகபகவான் 27.10.2009 முதல் 28.12.2009 முடிய உங்களின் பூர்வ புண்யாதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் செல்லும் இக்காலகட்டத்தில் மகளுக்கு திருமணம் கூடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அவர்களின் கல்வி, வேலை, திருமண முயற்சிகள் வெற்றியடையும்.
29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். வீடு, வாகன முயற்சிகள் பலிதமாகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள், சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் அப்பாவுக்கு உடல் நலத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் வந்துபோகும். அவருடன் கருத்துவேறுபாடுகள் வரும். சாமர்த்தியமாக பேசி சண்டைய குறையுங்கள். வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவார்கள். எனினும் மற்றவர்களை விமர்சித்து பேசவேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையா‌ட்கள் வளைந்து கொடுத்து போவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இருப்பு, கம்ப்யூட்டர் உதிரி பாகனங்கள், ரசாயன வகைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். உத்யோகத்தில் உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களின் வெகுநாள் கனவான பதவியுயர்வு இனி உண்டு. வேலைசுமை குறையும். கலைத்துறையினர்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். கன்னிப் பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வார்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு, பாராட்டு கிட்டும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்துநீங்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய உங்கள் யோகாதிபதி குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைபாக்யம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்து போகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் வி. ஐ. பிகளின் அறிமுகம் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். உயரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி விலகியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன், பெயர், புகழை வாரி வழங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்