ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : ரிஷபம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:21 IST)
என்கடன் பணி செய்து கிடப்பதே! என்று உழைத்துக் கொண்டே இருப்பவர்களே! 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் இந்த ராகுவும், கேதுவும் இணைந்து எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். திக்குமுக்காடிக் கொண்டிந்த நீங்கள் இனி திசையறிந்து பயணிப்பீர்கள். தடைபட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். ஆனால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்துநீங்கும். கொஞ்சம் பாசமாக நடந்து கொள்ளுங்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சுகாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் சொத்துப் பிரச்சனை நீங்கும். தாயாரின் நோய் குணமாகும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் ராசிநாதனான சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். தடைபட்ட வேலைகள் விரைந்து முடியும். பழுதான டிவி, ப்ரிஜை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மன உளைச்சல், பேச்சால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. இக்கால கட்டத்தில் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளின் செயல்களை கண்டு வருந்தினீர்களே! இனி வருந்தவேண்டாம். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வந்தமைவார். புது வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம். அதனால் உங்கள் புகழ் கூடத்தான் செய்யும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுபாடு தேவை. முடிந்த வரையில் அசைவ, கார உணவு வகைகளை தவிர்த்துவிட்டு, காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன், பதவியும் உயரும். கலைத்துறையினர்கள் தங்களின் வித்தைகளை வெளிப்படுத்துவார்கள். பரிசு, பணமுடிச்சும் உண்டு. திருமணம் தடைபட்டுப் போய்க் கிடந்த கன்னிப்பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் சொற்குற்றம், பொருட்குற்றத்தில் சிக்குவீர்கள். பல்வலி, கண் எரிச்சல்கள் வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும், பெரிய மனிதர்களுடன் கருத்துவேறுபாடுகளும் வந்து நீங்கும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சிறு சிறு அறுவை சிகிச்சைகள், வீண் செலவுகள் வந்து நீங்கும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் சகோதர வகையில் ஆதாயம் உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப்பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விடைகளையும் எழுதி பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் கொடுத்து போங்கள்.

இந்த ராகு கேது மாற்றம் புது அனுபவங்களை தருவதுடன், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்ள வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்