ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : கடகம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:05 IST)
வெளுத்ததை எல்லாம் பாலாக நினைப்பவர்களே! இதுவரை எந்த ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கி வைத்ததுடன் தாழ்வு மனப்பான்மையையும், கவலைகளையும் தந்த ராகுவும், கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் மனம் தவித்ததே! ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். சந்தேகத்தினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்யம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்சனைகளில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். கண்-காது வலி நீங்கும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை அமையும். வி. ஐ. பிகளால் ஆதாயம் உண்டாகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், செலவுகள், மஞ்சள்காமாலை வந்து நீங்கும்.

பிள்ளைகளுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். உங்களின் அன்புக்கு கட்டுபடுவார்கள். மகளுக்கு உங்கள் அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல நல்ல வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பார்கள். பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டிட பணிகளை, இனி முழுமையாக கட்டி முடிக்கும் அளவிற்கு பணம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். ஒதுங்கிப் போன உறவினர்களும், நண்பர்களும் இனி ஓடிவந்து உதவுவார்கள். குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியர்களுக்கு பிள்ளை பாக்யம் உண்டாகும். வேலை இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிக் கொண்டே போன கன்னிப் பெண்களுக்கு இனி கல்யாணம் கூடி வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கலைத்துறையினர்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சித் தெரியும். உடல் ஆரோக்யம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடாபழக்க வழக்கங்கள் விலகும். மகனுக்கு தடைபட்ட திருமணம் முடியும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மகான்கள், சித்தர்களின் ஆசீர்வாதம் கிட்டும். பிள்ளை பாக்யம் உண்டு. வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சோர்வு, களைப்பு வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன், கரெண்டர் கையெழுத்திட வேண்டாம். கடுமையான விரதங்களை தவிர்க்கவும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும். அருகிலிருக்கும் கோவிலுக்குக் கூட போகமுடியாமல் போனதே! இனி புண்ணியத் தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள்.

இந்த ராகுகேது மாற்றம் ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்