ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : சிம்மம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:02 IST)
வாயால் பேசாமல் இதயத்திலிருந்து பேசுபவர்களே! உங்களுக்கு இந்த ராகு-கேது மாற்றம் எப்படி இருக்கும் என்பதனை பார்ப்போம் வாருங்கள்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள், கடன் தொல்லைகள் என்று பல விதங்களில் உங்களை பாடாய் படுத்தினாரே! ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதுடன், உங்களின் யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் குதுகலம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்சன், அலைச்சல், முன் கோபம் குறையும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தம்பந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகும். எனினும் அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மனக்கவலைகள், செலவுகள் வந்து செல்லும்.

பிள்ளைகளின் போக்கில் ஒருகண் வையுங்கள். உங்களின் மனக்கஷ்டங்களை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம். மகனுக்கு நல்ல வேலை அமையும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த குல தெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. வாகனவசதி பெருகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் விற்க வேண்டி வரும். தாய்மாமன் வகையில் மோதல் வரும். கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களைப் பற்றிய கிசுகிசுகள் விலகும். உங்களின் திறமைகளுக்கேற்ப நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டான பதினொன்றில் வந்தமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வேலை அமையும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இனி புகழ்ந்து பேசுவார்கள். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். வியாபாரத்தை மாற்றியமைப்பீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவார்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.

இந்த இராகுவும்-கேதுவும் துவண்டிருந்த உங்களுக்கு புது தெம்பையும், செல்வம் செல்வாக்கையும் அள்ளித்தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்